மேயரை வெளியேற்றிய முதலமைச்சரின் பாதுகாவலர்கள்!
ம.பா.கெஜராஜ்,
முதலமைச்சர் கலந்து கொண்ட விழாவுக்கு தாமதமாக வந்த மேயர் சுஜாதாவை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர், காட்பாடியில் நடந்த அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இதற்கென முதலமைச்சர் சென்னையிலிருந்து காட்பாடி ஜங்ஷனுக்கு ரயில் மூலம் வந்தார்.
அவரை வரவேற்க முன் கூட்டியே ஜங்ஷன் வந்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் அங்கு காத்திருந்தனர்.
பின்னர் குறித்த நேரத்தில் ரயில் வந்த நிலையில் முதல்வரை வரவேற்ற அமைச்சர்கள் அவரை காட்பாடி ஆண்கள் மேல்நிலைபள்ளியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மேடைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு பல ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இருந்தனர்.
இந்நிலையில் தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
அதன்பின்னர் தாமதமாக அங்கு வந்த மேயர் சுஜாதா மேடையருகே வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், மேடம் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது நீங்க தயவு செய்து அப்படி போய்விடுங்கள் என்று அவரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
சற்று நேரம் தயங்கி நின்ற மேயர் பின்னர் விருட்டென்று அங்கிருந்து கிளம்பினார்.
இந்த காட்சிகளை பார்த்தவர்கள், மாநகராட்சி எல்லைக்குள் முதலமைச்சரின் பங்ஷன் நடக்கிறது, ஒருமேயரே இப்படி தாமதமாக வரலாமா? அவர் யாரை குறைத்து மதிப்பிடுகிறார் என்று தெரியவில்லை என்று வாய்விட்டே சொன்னார்கள்.