எங்களுடன் கூட்டணியில் உள்ளவர்கள் தொடர்ந்து இருப்பார்கள் என நம்புகிறோம்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

கு.அசோக்,
முன்னாள் பிரதமர் தேவகவுடா எப்போதுமே தமிழ்நாட்டிற்கு காவிரிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தரகூடாது என்பதில் வைராக்கியமாக இருப்பவர் அரசியல் ஆதாயத்திற்காக இப்போதும் அதையே கூறுகிறார் - தமிழகத்தில் தேர்தலை சந்திக்க திமுக எப்போதும் தயார், பாஜக அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திமுக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் திரளானோர் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர் அனைவருக்கும் வேட்டி மற்றும் துண்டுகளை பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முகமது சகி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், துணை மேயர் சுனில், வன்னியராஜா, உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பும் சரி, பிரதமராக இருந்த போதும் சரி, இப்போதும் கூட தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தர கூடாது என்பதில் வைராக்கியமானவர்,அவர் இடத்தில் இருந்து தமிழகத்திற்கு சாதமான வார்த்தைகள் வராது.
டிரிப்யூனல் அமைப்பதை எதிர்த்தார், டிரிப்யூனல் கெஜெட்டில் போடுவதை எதிர்த்தார். அவர் காலம் பூராக தமிழகத்திற்கு தண்ணீர் தர எதிர்பார். மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என தேவகவுடா கூறுவது, அவர் ஆதாயத்திற்காக பேசுகிறாரோ என்று தெரிகிறது. ஆனால் அவர் தமிழகத்திற்கு எதிர்ப்பாக தான் பேசுவார்.
அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும் நாங்கள் என்ன அவர் கையையா பிடித்துள்ளோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் திமுக சந்திக்கும். இது கொள்கைக்காக உருவாக்கப்பட இயக்கம் திமுக.
தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம், இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போது இருப்பவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என நம்புகிறோம். தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்டதற்கு அவர் எதிர்க்கட்சி, எப்போது தமிழகம் நன்றாக உள்ளது என கூறப்போகிறார் அவர் அப்படி தான் கூறுவார் என சொன்னார்.