மம்தாபானர்ஜி முன்னணி! முதல்வர் பதவிக்கு ஆபத்தில்லை:- கொல்கொத்தா இடைத்தேர்தல் நிலவரம்!

மம்தாபானர்ஜி முன்னணி! முதல்வர் பதவிக்கு ஆபத்தில்லை:- கொல்கொத்தா இடைத்தேர்தல் நிலவரம்!

 ஜி.எஸ்.மேத்யூராஜ்,

 முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவின் பிரியங்கா திப்ரேவால் ஆகியோர் பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

  கொல்கொத்தாவில், பவானிபூர், ஜங்கிபூர் மற்றும் சம்சர்கஞ்ச் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்  30.09.2021 ஆம் தேதி நடைபெற்றது. இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மம்தாபானர்ஜி முன்னணியில் உள்ளார்.

இது பற்றின விவரம் வருமாறு,

இந்த ஆண்டு மார்ச் மாதம் அம்மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோற்றார். மம்தா கட்சி பெரும்பாண்மை பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட போதும், மம்தா தோல்வியுற்றதால் அவர் ஆறு மாதக்காலத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் வென்றாக வேண்டும்.

அதற்கு ஏதுவாக பவானிப்பூர் தொகுதியில் இருந்து வென்று வேளாண்துறை அமைச்சராக இருந்த சோபாந்தேப் சட்டோபாத்யாயால் ராஜீனாமா செய்தார்.

  அந்த தொகுதி உட்பட மொத்தம் மூன்று சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

அதில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக (பிஜேபி) 41 வயதான பிரியங்கா திப்ரேவல் என்ற வழக்கறிஞரை மம்தாவை எதிர்த்து நிறுத்தியது. அதே போல் சிபிஐ (எம்) வழக்கறிஞரான ஸ்ரீஜிப் பிஸ்வாஸை நிறுத்தியது. காங்கிரஸ் போட்டியிடவில்லை.

 இந்நிலையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கொல்கத்தாவில் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது.

   தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, மூன்று தொகுதிகளில் மொத்தம் 6,97,164 வாக்காளர்கள் உள்ளனர். பவானிபூரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20,64,56; அதில் 1,11,243 ஆண்கள் மற்றும் 95, 209 பெண்கள். பபானிபூரில் 287 பூத்கள் இருந்தன, அதில் முக்கிய பூத்களின் எண்ணிக்கை 269 ஆகும்.

  முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் மேற்கு வங்கத்தில் உள்ள பவானிபூர் சட்டமன்றத் தொகுதியில், நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 57.09 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சம்சர்கஞ்ச் 79.92 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஜாங்கிப்பூரில் 77.63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

  பவானிபூர் தொகுதிக்கு 21 சுற்றுகள், சம்சர்கஞ்சுக்கு 26 சுற்றுகள் மற்றும் ஜங்கிபூர் தொகுதிக்கு 24 சுற்றுகள் கொல்கத்தாவின் சகாவத் நினைவுப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

  வாக்கு எண்ணும் மையங்களில் இருபத்தி நான்கு மத்தியப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் அந்த பகுதி முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் வைக்கப்படும்.

 அதிகாரிகள் பேனா மற்றும் காகிதம் மட்டுமே எடுத்துவர அனுமதிக்கப்படுவார்கள், மற்றும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பார்வையாளர் மட்டுமே தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

 பவானிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கும், பா.ஜ.க.வேட்பாளர் பிரியங்கா திப்ரேவல் ஆகியோருக்கிடையே தான் கடும் போட்டி நிலவியது.

 இந்நிலையில் பவானிப்பூர் தொகுதியில் மம்தாபானர்ஜி அவர்கள் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.