அமைச்சர் மா.சு. மீது அரசு மருத்துவர் பகீர் குற்றச்சாட்டு! முதல்வருக்கு வீடியோ அனுப்பியதால் பரபரப்பு!

அமைச்சர் மா.சு. மீது அரசு மருத்துவர் பகீர் குற்றச்சாட்டு! முதல்வருக்கு வீடியோ அனுப்பியதால் பரபரப்பு!

 ம.பா.கெஜராஜ்,

  அமைச்சர் மா.சுப்பிரமணி மீது அரசு மருத்துவர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை முதல்வர் பார்வைக்கு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது பற்றின விவரம் வருமாறு,

  செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி உறைவிட மருத்துவராக தீனதயாளன் என்பவர் பணியாற்றி வந்தார். சிறிது காலத்திற்கு முன்னதாக இவரை பொறுப்பு உறைவிட அலுவலராக பணியமர்த்தியுள்ளனர். அவர், அந்த பொறுப்புக்கு வந்த பிறகு பல்வேறு முறைகேடுகளை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தான் சேகரித்த தகவல்களை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் உள்ளிட்டோருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

  அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த அமைச்சர் மருத்துவர் தீனதயாளனை அவமரியாதையாக திட்டியதோடு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 அப்படியிருக்க மருத்துவர் தீனதயாளன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பொறுப்பிற்கு வந்த பிறகு மருத்துவமனையில் நடைபெறும் சில ஊழல்களையும், பாலியல் சீணடல்களையும் தட்டிக் கேட்டதாக தீனதயாளன் கூறியுள்ளார்.

   சில மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பாலியல் அத்துமீறல், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகக் கூறுகிறார்.

   இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலர் ஆகியோருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆதாரங்களுடன் தகவல் அனுப்பியதாகவும் தெரிவிக்கிறார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆதாரங்களை எடுத்துக்கொண்டு அமைச்சரை நேரில் சந்திக்க சென்றபோது, அமைச்சர் மா.சுப்ரமணியம் தீனதயாளனை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல், அவரை செங்கல்பட்டில் இருந்து சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிட்டதாகவும் பேசியிருக்கிறார்.

  மேலும், மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 25 தொழிலாளர்கள் தங்களது குறைகளை அமைச்சரிடம் தெரிவிக்க சென்ற நிலையில், அவர்களையும் அமைச்சர் பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகவும் ,மேற்கண்ட குற்றச்சாட்டுகளை காணொலியில் பதிவிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீனதயாளன் கோரிக்கை வைத்துள்ளார்.

   இது சுகாதாரத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.