ஆன்லைன் சூதாட்டத்திற்கு கருத்துக்கணிப்பு கேட்கும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்:-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!

ஜி.கே.சேகரன்,
ஆன்லைன் சூதாட்டத்திற்கு கருத்துக்கணிப்பு கேட்கும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் நாட்றம்பள்ளி பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றின விவரம் வருமாறு,
இன்று காலை சேலத்திலிருந்து இருந்து சென்னை செல்வதற்காக அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி, ஓமலூர் வழியாக, தருமபுரி சென்றார். முன்னதாக அவருக்கு ஓமலூர் சட்டசபை தொகுதி சார்பில், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மணி தலைமையில், தீவட்டிப்பட்டியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் பழனிசாமி பேசியதாவது:
சேலம் மாவட்டம் அ,தி.மு.க., கோட்டை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கலாம், ஆனால் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க.,தான் இன்றைக்கு ஆட்சியில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
ஜெ., ஆட்சி முன்னும், மறைவுக்கு பிறகும், நிறைய திட்டங்களை ஓமலூர் பகுதியில் நிறைவேற்றி உள்ளோம். சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குவது, கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வழங்குதல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிகமாக ஏழைகள் வசிக்கும் பகுதியில் அம்மா கிளினிக் ஏற்படுத்தி பொது மக்களுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்த அரசாங்கம் ஜெ., அரசாங்கம்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டம் என்பதாலும் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு இருப்பது என்று எண்ணி அதை மூடி உள்ளனர். நல்ல நல்ல திட்டங்களை மூடு விழா நடத்துவதற்கு தான் இந்த அரசாங்கம் வந்ததே தவிர, மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை. இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்று பேசினார்.
பின்னர் சென்னைக்கு செல்லும் வழியில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம் மேலோங்கி விட்டது பெண் பிள்ளைகள் சீருடைகளிலேயே மது அருந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எது கிடைக்கிறதோ இல்லையோ எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கவனமாக பார்த்து வளர்க்க வேண்டும்.
இந்த அரசை நம்ப கூடாது என்றும் அதிமுக ஆட்சியில் இருக்கும் போது ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரிக்கை வைத்தோம் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் ரம்மியை தடை செய்யலாமா வேண்டாமா என்று கருத்துக்கணிப்பு கேட்கிறது.
சூதாட்டம் நடத்த வேண்டுமா வேண்டாமா என்று கருத்துக்கணிப்பு கேட்கின்ற ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும்தான் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார்.
இதில் சுமார் 3000- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.