பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்கு செய்கின்ற துரோகம்! மு.க.ஸ்டாலின் பேச்சு!

Ma.ba.Gajaraj,
பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரியவைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலியில் பேசினார்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,: "தமிழகத்தை மதிக்கும், தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால் அது உங்கள் கையில்தான் உள்ளது.
அதற்கு பிரதமர் மோடியை தோற்கடித்தாக வேண்டும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்.
அதற்கு சமீபத்திய உதாரணம் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம். அந்த மாநில மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ்ந்தனர். அதையெல்லாம் மறக்க முடியுமா?
அதனால்தான் சொல்கிறேன்... பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக வாழக்கூடிய இந்தியாவை வெறுப்பு விதைகளைத் தூவி நாசம் செய்துவிடுவார்கள்.
எனவே, நீங்கள் அமைதியான வளர்ச்சி நோக்கிய இந்தியாவுக்காக வாக்களிக்க வேண்டும் என்று கேட்கத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பாக குமரிக்கும், நெல்லைக்கும் பிரதமர் மோடி வந்திருந்தார். தேர்தல் வந்துவிட்டதால், இப்போது தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போய்கொண்டிருக்கிறார்.
வெள்ளம் வந்தபோது எங்கே இருந்தீர்கள்? இரண்டு இயற்கைப் பேரிடர் அடுத்தடுத்து தமிழகத்தின் வடமாவட்டத்தையும், தென் மாவட்டத்தையும் தாக்கியது. பிரதமர் மோடி அவர்களே அதற்காக ஒரு பைசாவது கொடுத்தீர்களா?
நிதிதான் தரவில்லை. வாக்கு கேட்டு தமிழகம் வந்தபோது மக்களுக்கு ஆறுதலான வார்த்தைகளையாவது கூறினீர்களா?
மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றாலும், மக்களுக்குக் கொடுக்க வேண்டியதை உதவ வேண்டும் என்பதற்காக மாநில அரசு செயல்பட்டது.
அமைச்சர்கள் பலர் இந்தப்பகுதியில் தங்கியிருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். தொற்று நோய்ப பரவாமல் இருக்க 2500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டேன்.
பாஜக எத்தனை ஒரவஞ்சனை அரசாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரவஞ்சனை மட்டுமா செய்கின்றனர். நிதியையும் தருவதில்லை. தமிழக மக்களை ஏளனம் வேறு செய்கின்றனர்.
கேலி செய்து கிண்டல் பேசுகின்றனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிவாரண நிதியும் கொடுக்கமாட்டாராம், மாநில அரசே மக்களுக்க நிவாரணத் தொகை வழங்கினால், அதையும் பிச்சை என்று ஏளனம் செய்வார்களாம்.
அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மக்களுடைய பணம்.
மக்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவுவதுதான் அரசின் கடமை. அதைக் கேட்பது மக்களின் உரிமை. மக்களாட்சியில் மக்களை அவமதித்தபோதே உங்களுடைய தோல்வி உறுதியாகிவிட்டது.
ஒருமுறையாவது மக்களை வந்து சந்தியுங்கள் அப்போது தெரியும். மக்கள் உங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளனர் என்பது தெரியும். அதன்பிறகு, உங்களுக்கு பிச்சை என்ற வார்த்தையே நினைவுக்கு வராது.
ஆட்சியும் பதவியும் இருப்பதால், பாஜகவினர் ஆணவத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
ஒரு மத்திய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்கார் என்றால், இன்னொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டுகிறார்.
தமிழர்கள் மீது உங்களுக்கு இத்தனை கோபம், வன்மம், வெறுப்பு. மக்கள் இடையே வெறுப்பை விதைத்து பிளவை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது. மேம்பட்ட சிந்தனைகளைக் கொண்ட நாம் நமது சகோதர, சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும்.
பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரியவைக்க வேண்டும்.
தேர்தலுக்காக மட்டும் பிரதமர் தமிழகம் வருகிறார். தமிழகத்துக்காக அவர் கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன? பிரதமர் பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்துக்கு ஒரு சிறப்பு திட்டத்தைக்கூட நிறைவேற்றாமல், 10 ஆண்டு காலம் என்ன ஆட்சி செய்தீர்கள்? ஆனால், நாங்கள் செலுத்தும் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கொடுத்தால், எங்களுக்கு 29 பைசாதான் திரும்பி வருகிறது" என முதல்வர் ஸ்டாலின் சாடினார்.