முன்னாள் மந்திரி சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! மனைவி மீதும் வழக்கு!!

முன்னாள் மந்திரி சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! மனைவி மீதும் வழக்கு!!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி வரிசையில் தற்போது  சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இலக்காக வைத்து 18 ஆம்  காலை முதலே சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில்,

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

 இந்த சோதனை நடப்பதற்கு முன் தினமான 17 ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும்  அவரது மனைவி ரம்யாவின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

 லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் மேற்படி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

 குறிப்பாக, 2016 முதல் 2021 வரையில் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக அவர் இருந்த காலகட்டத்தில் இந்த சொத்துகளை குவித்ததாக வழக்கு பதிவாகியுள்ளது.

 2016 ஆம் ஆண்டு 6 கோடி ரூபாய்க்கான சொத்துகளை அவர் வைத்திருந்ததாகவும் அந்தச் சொத்துகள் 57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது,"

அவர், தனக்கு 34 கோடி ரூபாய்க்கு செலவினங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 அப்படியானால், செலவினங்கள் போக நிகர வருமானம் 24 கோடி ரூபாய் ஆகும். இதனை வைத்துக் கொண்டு அவர் எப்படி 51 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கினார் என்பதுதான் இந்த வழக்கின் முக்கிய லகான்.

 இந்த 27 கோடி ரூபாய் வித்தியாசம் காரணமாகத்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாம்.

 ``ராசி புளூ மெட்டல்ஸ், ஸ்ரீவாரி ஸ்டோன்ஸ் என விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய பல நிறுவனங்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளன.

 இதில் ஒரு சில நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருக்கிறார். சில நிறுவனங்களில் முதலீடு மட்டும் செய்துள்ளார். அவர் மனைவியும் வி.பி.எண்டர்பிரைசஸ் உள்பட சில நிறுவனங்களில் பங்குதாரராக இருந்துள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

   கடந்த 5 ஆண்டுகளில் 7 டிப்பர் லாரிகள், பி.எம்.டபுள்யூ கார், ஜே.சி.பி, மிக்ஸர் வாகனம் என பலவகையான வாகனங்களை விஜயபாஸ்கர் வாங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் 4 கோடி ரூபாய்க்கு விவசாய நிலம் ஒன்றையும் சென்னையில் பகீரதி அம்மன் சாலையில் 14 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியுள்ளதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,"

 இந்த வழக்கு நிச்சயமாக வேலுமணி, வீரமணி வழக்குகளைப்போல இல்லாமல் சற்று சீரியசாகவே இருக்கும் என்பது லஞ்ச ஒழிப்புதுறையினரின் கருத்து.

குறிப்பு: விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு கோவித் தொற்று இருந்ததாக கூறி விசாரணையில் தப்பிக்க முயன்ற போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பிபிடி கிட் அணிந்துக் கொண்டு சோதனை நடத்தியதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் சொல்கின்றன.