திமுக ஐடி விங் மாற்றத்துக்கு ஈஷா யோகா மையம் காரணமா? 'பி.டி.ஆர்.க்கு பதில் டி.ஆர்.பி. ராஜா!

ம.பா.கெஜராஜ்,
தமிழக அரசின் பல நலத்திட்டங்களை அதிமுக ஐ.டி.விங் துவைத்து காய போட்டு வருவதை அறிவோம். இருப்பினும் திமுக ஐடி விங் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்தது.
இந்நிலையில் திமுகவின் ஐ.டி.விங் கை கவனித்து வந்த மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏதோ சில மனகசப்புகள் நிகழ்ந்ததாக பேசப்பட்டு வந்தது. இது சில வாரங்களாக இருந்து வந்த சூழலில், அவரது மேற்பார்வையிலுள்ள ஐ.டி.விங் கைமாறும் எனவும், திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டிஆர்.பாலுவின் மகன் டிஆர்பி ராஜாவிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்படும் எனவும் கிசு கிசுக்கப்பட்டு வந்தது.
அவ்வாறு கிசு கிசுக்கப்பட்ட விவகாரம் தற்போது நிஜம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விலகினார். அவருக்கு பதில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
`பிடிஆர் ஸ்டைல் வேறு, என்னுடைய ஸ்டைல் வேறு. என்னுடைய அரசியல் என்பது பழையகால தி.மு.கவாக இருக்கும்' என்கிறார் டி.ஆர்.பி.ராஜா.
தமிழ்நாடு நிதியமைச்சரான
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஸ்தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் செயல்பட்டு வந்தபோது
சோஷியல் மீடியாக்களில் மும்முரமாக செயல்பட்டார் என்பதையும், அதனால் எழுந்த சர்ச்சைகளை கடந்தவர் என்பதையும் நன்கு அறிவோம்.
அந்த வகையில் லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தைப் புறக்கணித்தது, ஈஷா யோக மையத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்த பி.டி.ஆரின் டுவிட்டர் பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல் பி.டி.ஆரின் பல பதிவுகள் அரசியல்ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தவே, ஒருகட்டத்தில் அரசியல் பதிவுகளை சற்று ஒதுக்கி வைத்தார். தலைமையின் வழிகாட்டுதலே அதற்கு காரணம் கூறப்பட்டது.
அதன் தொடர்சியாகவே தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் தேதி தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக தலைமைக்குக் கடிதம் கொடுத்திருந்தார்.
அதனை ஏற்றுக் கொண்டு அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ நியமிக்கப்படுகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இனி திமுக ஐடி விங் எப்படி செயல்படப்போகிறது என்பது போக போகத்தான் தெரியவரும்.