துரைமுருகனை கடுப்பாக்கிய போலிஸ்! நான் மட்டும் தான் உள்ளூர் வேட்பாளர் அதிமுக பசுபதி! வீரமணி தான் என் முதுகில் குத்தினார் ஏ.சி.சண்முகம்! வேட்புமனு தாக்கல் பரபரப்பு!
கு.அசோக்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி, பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.இரா.சுப்பு லெட்சுமி அவர்களிடம் வேட்பு மனுதாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அமைச்சர் துரைமுருகனுடன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட செயலாளர்கள் நந்தகுமார், தேவராஜ், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தியேன் ஆகியோர் உடன் வந்தனர்.
முன்னதாக, திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் உள்ளே வரவில்லை. அவரை போலிசார் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. அதை புரிந்துக்கொண்ட துரைமுருகன் தேவராஜ் எங்கே என்று பலமுறை கேட்டார். அதற்கு அங்கு பணியிலிருந்து காவல் அதிகாரி, சார் அவர் உள்ளே சென்று விட்டார் என சொன்னார்.
இதனால் கடுப்பான அமைச்சர் துரைமுருகன், தேவராஜ் எங்க உள்ளே போனார் என்று குரலை உயர்த்தி கேட்டுக் கொண்டே இருந்தார். அதன் பிறகே தேவராஜ் உள்ளே வந்தார். துரைமுருகனை நந்தகுமார் சாந்தப்படுத்தி அழைத்துச் சென்றார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வேலூரில் இருந்து இவர்கள் ஊர்வலமாக வந்தனர். இதற்காக வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் காலை முதலே சாலைகளின் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி வைத்திருந்தனர்.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள்.
மனுதாக்கல் செய்த பின்னர், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், கடந்த முறை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்து மக்கள் பணியை செய்துள்ளேன். கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தமிழக அரசு இடம் பார்த்தது ஆனால் மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை இந்த முறை கண்டிப்பாக நான் வெற்றி பெற்றால் கேந்திரிய வித்யாலயா பள்ளியை கொண்டு வருவதுதான் முதல் பணி என கூறினார்.
கதிர் ஆனந்துக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி,
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் மருத்துவர் பசுபதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அப்பு,வேலழகன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதிமுக பசுபதிக்கு மாற்று வேட்பாளராக வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அதிமுக வேட்பாளர் பசுபதி செய்தியாளர்களிடம் கூறுகையில் அரசு மருத்துவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். வெற்றி பெற்றால் முழு நேரமும் மக்களுக்காக சேவை செய்வேன்.
போட்டியிடும் வேட்பாளர்களிலேயே நான் தான் வேலூர் தொகுதியை சேர்ந்தவன் என கூறினார்.
பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்,
பாஜக வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி ஒரே நபர் தான் என் முதுகில் குத்தினார் அதனால் தான் கடந்த முறை தோல்வியை தழுவினேன் என்று பேட்டியளித்தார்.
அவர் வேட்புமனுதாக்கல் செய்தபோது, அவருடன் பாமக மாவட்ட செயலாளர் இளவழகன், அமமுக சார்பில் முன்னாள் எம்.பி. சி. கோபால், பாமக மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம், உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர் ஏ.சி.சண்முகத்திற்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி லலிதா லஷ்மியும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்திய குடியுரிமை சட்டம் யாருக்கும் பாதிப்பில்லை. மேலும் கடந்த முறை அதிமுக தொண்டர்கள் அனைவரும் எனக்காக வேலை செய்தனர். ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி மட்டுமே என் முதுகில் குத்தினார். அதனால் தான் நான் தோல்வியை தழுவினேன் ஆதாரங்கள் இருக்கிறது விரைவில் வெளியிடுகிறேன் என கூறினார்.
வீரமணி எதிர் முகாம் வேட்பாளருக்கு சாதகமாக சுமார் 75 ஆயிரம் வாக்குகளை மடைமாற்றினார் என்பதே ஏ.சி.சண்முகத்தின் குற்றச்சாட்டு.