ஓட்டை பாலத்துக்கு நிரந்தர தீர்வு காணுங்க சார்!

க.பாலகுரு,
நகர் பகுதியில் உள்ள பிரதான ரயில்வே மேம்பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
திருவாரூர் நகர் பகுதியில் உள்ள பிரதான ரயில்வே மேம்பாலத்தில் திடீரென 4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து அறிந்த நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக அந்த பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர். நாகை மற்றும் தஞ்சையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் இந்த ஒரு பாலத்தின் வழியாகவே திருவாரூரை கடக்க வேண்டிய நிலையில், திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்தை கடந்தனர்.
மேலும் அவ்வப்போது இந்த பாலத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று பள்ளம் ஏற்பட்டு வரும் நிலையில், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் இந்த பாலம் பராமரிப்புக்காக மூடப்பட்டால் முற்றிலுமாக போக்குவரத்து தடைபடும். எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.