அதிமுக கூட்டணியில் தத்தளிக்கும் புரட்சி பாரதம் - புதிய தமிழகம்!

உ.சசிகுமார்,
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய பின்னர் களம் சூடேறியிருக்கிறது. ஆனால் அக்கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் சிலஅமைப்புகள் மனவருத்தத்தில் உள்ளன.
குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த புரட்சி பாரதம் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அக்கட்சிக்கு சீட்டு வழங்கப்படாததால் இந்த நிலை.
ஆனால் சீட்டு கிடைக்கப்பெற்ற புதிய தமிழகம் கட்சியும் தற்போது அதிமுக வின் நிர்பந்தத்துக்கு ஆளாகி மனம் வருந்திக் கொண்டிருக்கிறார்களாம்.
நாளைக்கு வேட்புமனு தாக்கல் இறுதி நாள் என்கிற நிலையில், நேற்று தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அதிமுக, புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என கிருஷ்ணசாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு கிருஷ்ணசாமி தரப்பில் இருந்து உறுதி ஏதும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. நாளை கிருஷ்ணசாமி மனுத்தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது குறித்து முடிவு செய்ய இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறுகிறதாம்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ?