12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெற்றார் முதலமைச்சர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் 12 மணிநேர வேலை மசோதா நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மசோதா திரும்பப் பெறப்படுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
உலக அளவில் கடைபிடிக்கப்படும் தொழிலாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை சார்பில் மே தின விழாவானது மே தின பூங்காவில் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவப்பு நிற உடை அணிந்து கலந்து கொண்டு மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் 12 மணிநேர வேலை மசோதா நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மசோதா திரும்பப் பெறப்படுகிறது.
மேலும் மசோதா திரும்பப் பெறுவது குறித்து விரைவில் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்படும்.
தொழிலாளர் நலனில் என்றும் சமரசம் செய்யமாட்டோம் எனவும் முதலமைச்சர் பேசினார்.