நம்பிக்கை.... நாணயம் விசுவாசம்:-மதுரை மேயர் பதவி பரிசு! தட்டித் தூக்கிய இந்திராணி!!

நம்பிக்கை.... நாணயம் விசுவாசம்:-மதுரை மேயர் பதவி பரிசு! தட்டித் தூக்கிய இந்திராணி!!

டி.ஜி.எஸ்.குமார்,

  முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் இருந்த போதும் சரி, அவரது மகனான நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் சரி இவர்கள் குடும்பத்துக்கே விசுவாசமாக இருந்ததால் இந்திராணி மதுரை மாநகராட்சி மேயராக அமரவைக்கப்பட்டிருக்கிறார்.

   மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் திமுக 67 வார்டுகளையும், காங்கிரஸ் 5 வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளையும், மதிமுக 3 வார்டுகளையும், விடுதலை சிறுத்தைகள் ஒரு வார்டையும் கைப்பற்றினர்.

    அதிமுக 15 வார்டுகளையும், பாஜக ஒரு வார்டையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றியது. திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் மேயராகுவது உறுதியானது. மேயர் வேட்பாளர் 'சீட்' பெற முக்கிய கவுன்சிலர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி மேலிடத் தலைவர்கள் சிபாரிசு மூலம் பெரும் முயற்சி செய்தனர்.  

  இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோர் இணைந்து 57-வது வார்டு கவுன்சிலர் இந்திராணிக்கும், முன்னாள் அமைச்சரும், மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான பொன்.முத்துராமலிங்கம் தனது மருமகளும் 32-வது வார்டு கவுன்சிலருமான விஜயமவுசுமிக்கும், அமைச்சர் பி.மூர்த்தி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் ஆகியோர் 5-வது வார்டு கவுன்சிலர் வாசுகிக்கும் கட்சித் தலைமைக்கு சிபாரிசு செய்தனர்.

 இடைச்சொறுகலாக 4-வது பெயராக 79-வது வார்டு கவுன்சிலர் லக்ஷிகா ஸ்ரீ பெயரும் இதில் இடம்பெற்றது.

  இதில் வேடிக்கை என்னவெனில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை இல்லாமலே ஸ்டாலின் நேரடியாக லக்ஷிகா ஸ்ரீயை மேயர் வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டதால் மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு காணப்பட்டது.

  ஆனாலும் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனால் சிபாரிசு செய்யப்பட்ட இந்திராணிக்கே மேயர் வாய்ப்பு கிட்டியது.

   இந்திராணியின் கணவர் பொன்வசந்த் வழக்கறிஞராக உள்ளார். ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராக உள்ளார். இவர், மாவட்ட மாணவர் துணை அமைப்பாளராகவும், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் சபாநாயகர் பிடிஆர்.பழனிவேல் ராஜன், அவரை தொடர்ந்து அவரது மகன் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்ட தொகுதிகளில் தேர்தல் பணியாற்றி அவர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளார்.

   பொதுவாக பழனிவேல் தியாகராஜன், கட்சிப்பதவிகளுக்கு யாரையும் சிபாரிசு செய்ய மாட்டார். மாநகர கட்சி விவகாரங்களிலும் தலையிட மாட்டார். பகுதி கழக செயலாளர், மாவட்ட செயலாளரிடம் கேட்டே கட்சிப்பணிகளில் ஈடுபடுவார்.

   ஆனால், தனது தந்தைக்கும், தனக்கும் விசுவாசியாக இருந்ததோடு தனது மத்திய தொகுதிக்குட்பட்ட கவுன்சிலராகவும் இருந்ததால் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாராஜன் மேயர் வேட்பாளருக்கு தனது ஆதரவாளர் பொன்வசந்த் மனைவி இந்திராணியை கட்சித் தலைமைக்கு சிபாரிசு செய்து அவரை மேயராக்கி பெருமைபடுத்தியிருக்கிறார். இதற்கெல்லாம் நம்பிக்கை நாணயம் விசுவாசம் தான் காரணம் என்கிறார்கள்.

   இந்திராணி தேனி பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பி.ஏ வரலாறும், காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்ஏ வும் படித்துள்ளார்.

   அரசியலில் ஈடுபடாமல் சாதாரண குடும்பத் தலைவியாக இருந்தவந்த இந்திராணி தற்போது மதுரை மேயர் என்கிற பதவியை அலங்கரிப்பவராக உயர்ந்துள்ளார்.

   அவருக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் அனுபவம் இல்லை எனினும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கணவர் பொன்வசந்த் ஆலோசனை பேரில் மதுரை மாநகரை பார்போற்றும் அளவுக்கு சீராக வைத்திருப்பார் என மக்கள் நம்புகிறார்கள்.