மக்களை கடன்காரர்களாக்கும் திமுக!ஓ.பி.எஸ். அறிக்கை!

ஆர்.ரமேஷ்,
மக்களை திமுக கடன்காரர்களாக்கிவிட்டது, 'தேர்தல் வாக்குறுதிப்படி, அனைவரின் நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
நாங்கள் 'ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று நகைக் கடன் வாங்கியவர்களில் 75 சதவீதம் கடனாளிகளுக்கு தள்ளுபடி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிக்கையில், 'ஏற்கனவே பெறப்பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 பயனாளிகளின் விபரங்களை பகுப்பாய்வு செய்ததில், 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடனாளிகள் தள்ளுபடி பெற தகுதி இல்லாதவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியென்றால், வெறும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் மட்டுமே தகுதியானவர்கள். இதற்கு முன் 16 லட்சம் பயனாளிகள் என்றனர்; அதிலும் 2.50 லட்சம் குறைந்து விட்டது.
நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு, 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக மாற்றியுள்ளது. இதற்கு தி.மு.க., தான் காரணம். இந்த செயல் நம்பிக்கை துரோகத்தின் உச்சகட்டம். எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி நகைக் கடனை தள்ளுபடி செய்து, கடன் சுமையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.