கர்நாடகா சி.எம்.போஸ்ட்டுக்கு டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா உள்ளிட்ட பலர் போட்டி!

ஆர்.செல்வராஜ்,
கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சி அருதி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் பதவிக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, தான் முதலமைச்சர் ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.
அதே போல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரும், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், ஒக்கலிக சமுதாய மக்கள் தேவேகவுடாவை முதலமைச்சராகவும், பிரதமராகவும் ஆக்கினீர்கள், அதுபோல் அவரது மகன் குமாரசாமியையும் முதல்-மந்திரி ஆக்கினீர்கள், எனவே இந்த முறை என்னை முதலமைச்சராக்க ஆக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.
ஆகவே சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சருக்கான பதவிக்கு போட்டா போட்டி நிலவுகிறது இதற்கிடையே தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது.
அதன்படி முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வருக்கு அப்பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு சி.எம். பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த சி.எம். அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் சி. எம். பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார். அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் யார் இருப்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி இருந்தார்கள். பெங்களூருவில் உள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்தது. அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி. சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தனிப்பெரும்பான்மை காங்கிரசுக்கு கிடைத்தால் முதலமைச்சர் பதவி யாருக்கு கொடுப்பது என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசித்துள்ளார்.
இந்நிலையில் நான் சொன்னபடி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்துவிட்டேன் என்று டி.கே.சிவகுமார் பேட்டி கொடுத்துள்ளது கவனிக்கபட வேண்டியவையாக உள்ளது.