டபுள் மீனிங்கில் பேசிய வட்டாட்சியர்! ஆட்சியர் நிகழ்ச்சியை புறக்கணித்து பணிகளை முடக்கிய விஏஓக்கள்! பொதுமக்கள் அவதி!
கு.அசோக்,
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை வட்டாட்சியர் ஸ்ரீதேவி என்பவர் டபுள் மீனிங்கிலும், தரக்குறைவாகவும் பேசுவதாக குற்றம் சாட்டி இந்த உள்ளிருப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இராணிப்பேட்டைமாவட்டம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சிலரை வட்டாட்சியர் ஸ்ரீதேவி தர குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் வடமாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் வனிதாவையும் தரக்குறைவாக பேசிய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அரக்கோணம் வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் துறை பணிகள் பாதிக்கப்பட்டது.
இது குறித்து மிஸ்டர் பொதுஜனம் தெரிவிக்கையில் ஸ்ரீதேவி அவர்கள் அரக்கோணம் வட்டாட்சியராக பணிக்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. அவர் விஏஓ க்கள் மற்றும் ஆர்.ஐ.க்களை ஒருமையில் பேசுவதும், மிரட்டுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசி டார்ச்சர் கொடுப்பதுமாக உள்ளார்.
இந்த நிலையில் விஏஓ வனிதா என்பவரை இரட்டை அர்த்தத்தில் பேசி அவதூறு செய்திருக்கிறார் வட்டாட்சியர் ஸ்ரீதேவி.அந்த விஏஓ கணவனை இழந்தவர் ஆவார்.
இது பற்றிய விவரம் வருமாறு,
ப்ளஸ் டூ படித்து முடித்த மாணவர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி தொடர்பாக சில ஏற்பாடுகளை செய்ய வேண்டிய பொறுப்பு வடமாம்பாக்கம் விஏஓ வனிதா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த பணியை நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு வரை மேற்கொண்ட வனிதா, வருவாய் அலுவலருக்கு தெரிவித்துவிட்டு 7 மணிக்கு பின் அரக்கோணத்திலிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
தக்கோலம் வழியாக செல்லும் பேருந்தில் விஏஓ வனிதா சென்றுக் கொண்டிருந்த போது வட்டாட்சியர் ஸ்ரீதேவி, விஏஓ வனிதாவை கைபேசியில் அழைத்து நான் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட வேண்டும், எங்கு இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு வனிதா, வட்டாட்சியரிடம் மேடம் நான் வருவாய் அலுவலரிடம் தகவல் தெரிவித்துவிட்டு பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று பதில் சொல்லியிருக்கிறார்.
அதெல்லாம் எனக்கு தெரியாது நீ உடனடியாக திரும்பி வா என்று வட்டாட்சியர் அழைத்த போது, மேடம் இரவு நேரமாகிவிட்டது, ஓட்டுநரும் இந்த இடத்தில் பேருந்தை நிறுத்துவாரா என்று தெரியாது மேடம் என்று வனிதா பதிலளித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரப்பட்ட ஸ்ரீதேவி உன் சோகக்கதையை எல்லாம் யாராவது ஜென்ட்ஸ் கிட்ட சொல்லு அவங்க பரிதாப படுவாங்க முதல்ல வா இங்க என்று இணைப்பை துண்டித்துள்ளார்.
வனிதா டிரைவரிடம் சொல்லி பேருந்திலிருந்து பாதி வழியில் இறங்கி ஆட்டோ ஒன்றை பிடித்துக் கொண்டு மீண்டும் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரும்பினார்.
தன்னை டபுள் மீனிங்கில் வட்டாட்சியர் பேசிய தகவல்கள் அனைத்தையும் விஏஓ சங்க நிர்வாகிகளுக்கு அழுது கொண்டே தெரிவித்திருக்கிறார்.
ஆகவே தான் மறுதினமான நேற்று அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் நடைபெற்ற ப்ளஸ் டூ மாணவர்களுக்கான விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இ.ஆ.பா. அவர்கள் பங்கேற்றார். அதற்காக அவர் வட்டாசியர் அலுவலகம் வழியாகவே சென்று அதில் பங்கேற்றார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அதே வழியாகவே திரும்பினார். அதுவரை சுமார் மூன்று மணி நேரம் விஏஓக்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இருந்தாலும் இந்த தகவலை அதிகாரிகள் கலெக்டர் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்லவேயில்லை.
பிற்பகல் ஒரு மணிக்கு அலுவலகத்துக்கு ஓடோடி வந்த வட்டாட்சியர் ஸ்ரீதேவி, அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நிருபர்களை வெளியேற்றிவிட்டு, அலுவலக கதவு ஜன்னல்களை சாத்திக்கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விஏஓக்களிடம் கெஞ்சி கூத்தாடி சமாதானம் செய்தார்.
அப்போது நான் பேசியது தப்புதான் இனி அப்படி பேச மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்தாராம்.
ஆகவே,இன்னொறு தடவை இப்படி நடந்துக் கொண்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று விஏஓக்கள் தரப்பில் வட்டாட்சியர் ஸ்ரீதேவியிடம் சொல்லப்பட்டு தற்போதைக்கு பிரச்சனை தள்ளிபோட்டப்பட்டிருக்கிறது.
இதே போல், சில மாதங்களுக்கு முன் வட்டாட்சியர் ஸ்ரீதேவி சோளிங்கரில் பணியில் இருந்த போது பல்லூர் ஆர். ஐ. யை அவதூறாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் அவர் நெமிலிக்கு மாறுதல் பெற்று கிளம்பிவிட்டார். இப்படியாக சக அரசு ஊழியர்களை அவர் அவதூறாக பேசி வருகிறார்.
மேலும் சமீபத்தில் கூட ஒரு வி ஓ வை ,நாயே என்று குறிப்பிட்டு திட்டி உளளார்.
வட்டாட்சியர் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதில் பங்கேற்று இருந்தஆர் ஐ ஒருவர் வெளியில் இருந்து விஏவை போன் செய்து அழைத்துள்ளார்.
அதன் பேரில் அலுவலகத்தில் வந்த வி ஏ ஓ வை ஸ்ரீதேவி வட்டாட்சியர் வெளியே போ நாயே என்று சொல்லி சவுண்ட் விட்டுள்ளார்.
அதற்கு சம்பந்தப்பட்ட ஆர் ஐ கூட கோபித்துக் கொண்டாராம். மேடம் நான் தான் அவரை வரச் சொன்னேன் ஏன் அப்படி அவரை திட்டினீர்கள் என்று கேட்டதற்கு அப்போதும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் வட்டாட்சியர்.
இது குறித்து வட்டாட்சியர் ஸ்ரீதேவி யிடம் கேட்ட போது, சார் அது மிஸ்கான்செப்ட் தான், பேசி முடித்துவிட்டோம். பப்ளிக்கை நாங்க ஹேண்டல் பண்ணிட்டோம் சார். வனிதாவை நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை, அதான் மிஸ்கான்செப்ட் என்று சொல்லிட்டேனே சார் என்று சொன்னார்.
மூன்று மணி நேரம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது பற்றி மாவட்ட ஆட்சியர் டாக்டர். J.U. சந்திரகலா அவர்களிடம் பேசினோம். இந்த விஷயம் குறித்து என்னுடைய பார்வைக்கு வந்தது. அது பற்றி விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
எது எப்படியோ? வட்டாட்சியரின் செயலால் எழுந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்னமோ பொதுமக்கள் தான்.