ரத்த வரலாறு, இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஐந்தாவது நாள்! அப்டேட்!

ரத்த வரலாறு, இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஐந்தாவது நாள்! அப்டேட்!

 இ.பிராங்கிளின்,

 இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் காசாவை ஒட்டியுள்ள அஷ்கெலான் என்ற நகரை நோக்கி ஹமாஸ் குழுவினர் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேநேரத்தில், இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்கிறது. இதனால், இருதரப்பிலுமே உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

   ஹமாஸ் குழுவினர் திடீரென சுமார் 7 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக காசாவுக்கு பிடித்துச் சென்றதால்  சுதாரித்துக் கொண்டு, அடுத்த சில மணி நேரத்தில் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.

   இஸ்ரேல் ராணுவத்தினர் காசா பகுதியில் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் குழுவினர் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலுக்குள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயுதம் தாங்கிய நபர்களையும் அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.

  இஸ்ரேல் விமானப்படையினர் காசா பகுதியில் ¢ இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், அதற்குப் பதிலடியாக, காசாவை ஒட்டி தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலான் நகரை மீண்டும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப் போவதாக ஹமாஸ் எச்சரித்தது. ஆகவே, அந்நகர மக்கள் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கெடு விதித்தது.

 இது குறித்து டெலிகிராமில் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், "காசா கரைக்கு வடக்கே அமைந்துள்ள இந்த நகரின் குடியிருப்பாளர்கள் மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும்" என்று எச்சரித்திருந்தது. அதேநேரத்தில், காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை விடுத்ததையும் ஹமாஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது.

 

 டெலிகிராம் கெடு முடிந்ததும் தாக்குதலை ஆரம்பித்த ஹமாஸ்

  ஹமாஸின் அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே, ஹமாஸ் மீண்டும் தாக்குதலை தொடங்கிவிட்டது. காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனாலும், இதனால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான மறைவிடங்களுக்குச் சென்றுவிட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிகிறது.

 காசா மீது விமானபடை தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

அஷ்கெலான் நகர் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்கிறது. கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஜக்காரியா அபு மும்மர், ஜாவத் அபு ஷாமல் ஆகிய 2 மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அவர்கள் இருவரும் ஹமாஸில் அதிகாரம் வாய்ந்த அரசியல் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.

பலி 2,500ஐ நெருங்குகிறது

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்களின் இறப்பு எண்ணிக்கை 870-ஆக உயர்ந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை முதல் குறைந்தது 1,008 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

 இத்தூதரகம், சமூக ஊடகங்களில் பதிவிட்ட கணக்குபடி 3,418க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிகிறது.

பாலத்தீனர்களை கண்டு கொள்ளாத எகிப்து

   ரஃபா என்ற பாதையை எகிப்து மூடியுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்குச் செல்லும் ரஃபா பாதை தான் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறும் ஒரே வழி. இப்பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காரணமாக எகிப்து தற்போது இந்தக் பாதையை மூடியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பாதை திறந்திருந்தாலும், அதனை கடந்து செல்ல நீண்ட காத்திருப்போர் பட்டில் இருக்கிறது. அந்த பட்டியலில் இருப்பவர்கள் மட்டுமே அந்த பாதையை கடந்து செல்ல முடியும். இஸ்ரேல் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி ஓடும் பாலத்தீனர்கள் அங்கிருந்து வெளியேறும் ஒரே வழியும் அடைபட்டிருப்பதால் மக்கள் உயிர் பயத்தில் உள்ளனர்.

 பணய கைதிகள் குறித்து கத்தாரில் ரகசிய பேச்சு.

 சனிக்கிழமை இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 100 முதல் 150 பேர் காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய இராணுவம், கடத்தப்பட்டவர்களின் 50 குடும்பங்களுடன் பேசியுள்ளதாகவும், இராணுவம் தகவல்களை உறுதிசெய்யும்போது மேலும் கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்பு கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

  ஆனால் ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா, சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.

   இரு தரப்புமே பணயக் கைதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறினாலும், கத்தார் மத்தியஸ்தத்தின் பேரில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் வசம் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலிய பெண்கள், குழந்தைகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டினரை விடுவிக்க இஸ்ரேல் கோரியிருப்பதாக தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்ய முன்வந்திருக்கிறது இஸ்ரேல்.