அவர்களை போய் 'முஸ்லிம் கைதிகள்' என்று சொல்வதா?

அவர்களை போய் 'முஸ்லிம் கைதிகள்' என்று சொல்வதா?

 உ.சசிகுமார்,

  பல்வேறு சிறைகளில்  நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பான விவாதம் தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிலையில், பாஜகவின் நாராயணன் திருப்பதி சர்ச்சைக்குரிய கருத்தை எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

   தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், கொண்டுவரப்பட்ட இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரித்து பேசிய னார் எடப்பாடி பழனிச்சாமி.

  அதில் "பல ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 36 இஸ்லாமிய சிறைக் கைதிகளை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையால் தான், இஸ்லாமியர்கள் விடுதலை ஆவது தடைப்படுகிறது" என்று பேசினார்.

   பழனிச்சாமியின் பேச்சுக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "ஆயுள் தண்டனை பெற்றுள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் 49 பேரின் பெயர்கள் ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவர் ஒப்புதல் அளித்ததும் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இப்போது திடீரென இஸ்லாமிய கைதிகள் மீது உங்களுக்கு பாசம் பொத்துக் கொண்டு வர என்ன காரணம்? என்று கேள்வியெழுப்பினார்.

அப்படியிருக்க இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அவரது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கோவை குண்டுவெடிப்பின் மூலம் எண்ணற்ற பொதுமக்களை உயிரிழக்கச் செய்த, நூற்றுக்கணக்கானோரை படுகாயம் அடையச் செய்த, பல கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை சேதப்படுத்திய பயங்கரவாதிகளை 'இஸ்லாமிய கைதிகள்' என்று அடையாளப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

   மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை மார்த்தட்டிக் கொள்பவர்கள், மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது அந்த இஸ்லாம் மதத்தையே அவமானப்படுத்தும் செயல். ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செயய தயாராக இருப்பது மனிதாபிமானற்ற செயல். தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்று சொன்னவர்கள், தற்போது தீவிரவாதிகளை 'முஸ்லிம் கைதிகள்' என்று சொல்வது முரண் இல்லையா?

  மதவாத அரசியலை செய்து மக்களை பிளக்கும் இந்த நிலை ஏன்?" என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.