சகலையால் வந்த சங்கடம்:- இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்த டிஐஜி சத்யபிரியா!

ம.பா.கெஜராஜ்,
அரும்பாக்கம் வங்கியில் திருடப்பட்ட நகைகளில் 3 கிலோ 700 கிராம் நகைகளை மறைத்து வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் தனிப்படை போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் இயங்கி வரும் பெடரல் வங்கியின் நிதி சேவை மையத்தில் கொள்ளை சம்பவம் நடந்ததை அறிவோம். இந்த கொள்ளை தொடர்பாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. முடிவில் முருகன் மற்றும் அங்கு பணிபுரிந்த பள்ளி தோழர்கள் பாலாஜி, சந்தோஷ், சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முதலில் வங்கியில் 20 கோடி ரூபாய் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது, பின்னர் கொள்ளையர்கள் பிடிபட்டபோது 32 கிலோ என போலீசார் கூறிய நிலையில் மேலும் 3 கிலோ 700 கிராம் நகைகள் காணாமல் போனதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அய்யய்யோ, 3 கிலோவுக்கு மேல் நகை எங்கு பதுக்கி வைக்கப்பட்டது என்பதை கண்டறிய, போலிசார் சற்று திகைத்தனர். அப்போது பிடிபட்ட கொள்ளையன் சந்தோஷிடம் போலீசார் விசாரித்தனர்.
சந்தோஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ' தனது மனைவி ஜெயந்தியிடம் 3.7 கிலோ தங்க நகைகளை கொடுத்தேன். நாங்கள் போலீசில் சிக்கி விட்டாலோ, ஏதாவது பிரச்சினை என்றாலோ இந்த நகைகளை விற்று எங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினேன் என்று தெரிவித்தார். இதையடுத்து ஜெயந்தியை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், இந்த நகைகளை தனது உறவினரான செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்திய நேரத்தில், அமல்ராஜே அந்த நகைகளை போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைப்பது போன்று கொடுத்துள்ளார். திருட்டு நகைகள் வீட்டில் இருப்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தகவல் தெரிவிக்காமல் போலீசார் நெருங்கியவுடன் ஒப்படைத்ததால் அவரும் இந்த கொள்ளை கும்பலாக ஆதரவாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து அவரும் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், அவரது மனைவி இந்திரா, கொள்ளை வழக்கில் சிக்கிய சந்தோஷின் மனைவி ஜெயந்தி ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் அமல்ராஜ், அவரது மனைவி இந்திரா ஆகியோரை தனிப்படை போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, அவர்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ 700 கிராம் எடையுள்ள திருட்டு நகைகளை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவி இந்திராவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் அமல்ராஜை சஸ்பெண்டு செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.