வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொடூர கொலை- 13  பேர் கைது!

வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொடூர கொலை- 13  பேர் கைது!

 G.பாலகுரு,

 மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர்  படுகொலை செய்யப்பட்டார் இதில் சம்பந்தப்பட்ட  13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலவரம் ஏற்படாமல் தடுக்க டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது, வன்னியர் சங்கத்தினர் சாலை  மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது,பாதுகாப்பு பணிக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(31) ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இவர் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் ஆவார். இவருக்கும் கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளர் கதிரவன் என்பவருக்குமிடையே கடந்த நவம்பர் மாதம் ஹோட்டலில் சாப்பிட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார்.

 இது குறித்து கதிரவன் காவல்துறையிடம் அளித்ததின் பேரில்  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால் கண்ணன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுதலையாகி மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு கண்ணன, அவரது நண்பர்கள் நல்லத்துகுடியைச் சேர்ந்த  ரஞ்சித்(19) மற்றும் டபீர் தெருவை சேர்ந்த திவாகர்(22) ஆகிய 3 பேரும் பைக்கில் மயிலாடுதுறை கடைவீதிக்கு சென்று விட்டு  பார்க் அவன்யூ சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கண்ணன் சென்ற பைக்கை சிலர் வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

  உடன் ரஞ்சித். திவார் ஆகியோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கண்ணனை வழிமறித்த கலைஞர் காலணியை சேர்ந்த  கும்பல் கண்ணனை சரமாரியாக மாடு வெட்டும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

  இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர்.

  அப்பகுதியில் உள்ள சிசிடி கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கண்ணனுக்கும், கலைஞர் காலனியை சேர்ந்த கதிவரன் என்பவருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இக்கொலை வழக்கு  தொடர்பாக 22 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 பின்னர் கதிரவன்.39, பிரபாகரன்.52, துரைக்கண்ணு.48, சேது24, சந்தோஷ்.19, முருகவேல்.37, கார்த்தி.31, ரஞ்சித்.19, சந்தோஷ்.19, ஹரிஷ்.20, அஜித்.24, பிரிதிவிராஜ்.32, குணசேகர்.22, ஸ்ரீநாத்.20, ஆகிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கொலை செய்த அனைவரையும்  கைது செய்யக்கோரி அந்த சங்க மாநில துணைத் தலைவர் சக்திவேல், பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

  மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததின் பேரில்  மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 மேலும் இக் கொலை சம்பவத்தால் மயிலாடுதுறை நகரில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதால் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். 

 மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை நகரில் உள்ள 5 டாஸ்மாக்கடைகளும் நேற்று மூடப்பட்டது. இதனால் மயிலாடுதுறையில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

  இறந்த கண்ணன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் வன்னியர் சங்க மாநில தலைவர் பூத.அருண்மொழி, துணைத் தலைவர் ஸ்டாலின், உழவர் பேரியக்கத் தலைவர் ஆலயமணி உட்பட கட்சி நிர்வாகிகள் இறந்த கண்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

  தொடர்ந்து பூத அருள்மொழி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் எஸ்பி நிஷாவை சந்தித்து வன்னியர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாக உள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெற்றால்  கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

  அப்போது எஸ்பி நிஷா கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பூத அருள்மொழி உள்ளிட்டோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று கண்ணனின் உடலை பெற்று அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.