நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் உட்பட ஏழு பேர் விடுதலை!

ம.பா.கெஜராஜ்,
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் உட்பட ஏழு பேரை திருவ்வள்ளூர் மகளீர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறது.
விடுதலை பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றவர் சித்ரா.
அவர் சென்னையை அடுத்து நசரேத்பேட்டை அருகே உள்ள ஸ்டூடியோவில் தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்ததால் அதற்கு அருகிலேயே விடுதி ஒன்றில் தனது கணவர் ஹேம்நாத்துடன் தங்கி வந்தார்.
அப்படியிருக்க கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் தூக்கு போட்ட நிலையில் விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர்.
சித்ராவின் கன்னத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறும் காவல் நிலையத்தில் நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் புகார் அளித்தார். இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை காமராஜ் மனு தாக்கல் செய்தார்.
இருந்த போதும், 67 பேரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்ததுடன், வழக்கு விசாரணையை ஆறு மாத காலத்திற்குள் முடித்து வைக்குமாறு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடிகை சித்ராவின் மரண வழக்கில் இன்று (ஆகஸ்ட் 10) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், சித்ராவின் மரண வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சித்ராவின் மரணத்திற்கும் அவரது கணவர் ஹேம்நாத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில் சித்ராவின் ரசிகர்களாகட்டும், ஊடகத்தினராகட்டும் வழக்கின் தன்மையை புரிந்து கொள்ளாமல் சித்ராவின் கணவருக்கு அவரவர் இஷ்டம் போல் தண்டனை கொடுத்தனர். ஆனால் நீதிமன்றம் இன்று அவரை குற்றவாளி இல்லை என்று அறிவித்திருக்கிறது.
முதல் தகவல் அறிக்கையை மட்டுமே வைத்துக்கொண்ட ருசிகர சம்பவம், கொடூர கொலை என்று பரபரப்புக்காக செய்தி வெளியிட்ட "தேய்ந்து போன ரெக்கார்டுகள்" இப்போது இந்த விடுதலைப்பற்றியும், வழக்கின் விவரங்கள் பற்றியும் சித்ராவின் ரசிகர்களுக்கு செய்தியாக தெரிவிப்பார்களா அல்லது அதற்கும் விளம்பரக்கட்டணம் கேட்பார்களா?