சாலை பழுது! கண்டுகொள்ளாத ஊராட்சி தலைவர்!!

ஜி.கே.சேகரன்,
ஜங்களாபுரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜங்காளபுரம் பகுதியில் இருந்து ஆத்தூர் குப்பம் வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவில் உள்ளது.
இது மண் சாலையாகவும் குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது, மேலும் இந்த சாலையில் எந்த ஒரு தெருவிளக்கு மற்றும் இப்பகுதிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே இதில் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகிறது.
எனவே இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
குறிப்பாக இந்த புகார் மனு மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலும் மேலதிகாரிகளுக்கு தகவல் கூறாமலும் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மெத்தன போக்காக செயல்படுகிறார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே இந்த சாலை மற்றும் தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.