பிரசாந்த் கிஷோரால் விமர்சிக்கப்படும் நிதிஷ்! இண்டியா கூட்டணியில் முன்னணியில் இல்லை!

ம.பா.கெஜராஜ்,
அரசியல் கட்சிகளிடமே கட்டணம் பெற்றுக் கொண்டு தேர்தல் ஆறுடம் சொல்லிவருபவர் பிரச்ந்த் கிஷோர். அதற்காகவே ஐபேக் என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் என்றைக்காவது ஒரு நாள் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது பீகார் முதல்வர் வேட்பாளராவது அவரையே முன்னிலைப்படுத்துவார் என்பது ஒரு சிலரது கணிப்பு. இந்நிலையில் சொந்த மாநிலத்தில் முதல்வராக வீற்றிருக்கும் நிதிஷ் குமாரை சகட்டு மேனிக்கு துவம்சம் செய்து வருகிறார்.
அது பற்றின சில சங்கதிகளைப்பார்ப்போம்.
பிரசாந்த் கிஷோர், டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வெற்றிக்காக வேலை செய்துள்ளார். ஆனால் தற்போது ஐபேக்கிற்கு இன்டர்வெல் விட்டிருக்கிறார். அதில் கிடைத்த நேரத்தில் "ஜன் சூரஜ் யாத்ரா" என்ற நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இதை நிதீஷ் குமாரை வசைபாடுவதற்காகவே உபயோகித்து வருகிறார்.
இது பீகார் மக்களிடம் மிகவும் பிரபலம் என்பதால், எங்கு சென்றாலும் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் வச்சு செய்வதை மட்டும் நிறுத்துவதில்லை. இத்தனைக்கும் ஏற்கனவே இவர்கள் இணக்கமாக இருந்தவர்கள்தான்.
ஒரு காலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தில் ஒன்றாக பயணம் செய்தவர்கள் தான். ஆனால் தற்போது முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
2024 மக்களவை தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார் முக்கியமான நபராக விளங்கும் நிலையில், அவருக்கு சொந்த மாநிலத்திலேயே அரசியல் செய்ய தெரியாது. தேசிய அளவில் என்ன செய்யப் போகிறார். விரைவில் நிதிஷ் குமாரின் அரசியல் முடிவடையப் போகிறது. இவருக்கு எதிர்காலமே இல்லை என்றெல்லாம் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
அப்படியிருக்க டெல்லியில் நடந்த 4வது கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை பல தலைவர்கள் கை காண்பித்தனர். அவர் பிரதமர் வேட்பாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தங்கள் கருத்தை முன்வைத்தனர். இது நிதிஷ் தரப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அதுமட்டுமல்ல நிதிஷ் அந்த கூட்டத்தில் பேசும் போது இந்தியில் பேசினார். அதற்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்குமாறு திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் முகம் சிவந்த அவர் முதலில் தெற்கில் இருந்து வருபவர்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என வெடுக்கென்று பேசிவிட்டார்.
கூட்டணி சிதைத்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் திமுகவினர் அமைதி காத்தனர்.
இந்நிலையில் நிதிஷ் குமாரின் செயல்பாடுகள் பற்றி பேசிய பிரசாந்த் கிஷோர், நான் தான் அப்போதே சொன்னேன். இவருக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது என்று சொல்லியிருக்கிறார்.