ஆட்சியரை கேள்விக் கனைகளால் துளைத்த பா.ஜ.கவினர்! அவசரமாக புறப்பட்ட எம்.எல்.ஏ.!
ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே மழை வெள்ளத்தில் பாலாற்றுப் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடத்தை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினரை பாஜக மற்றும் அதிமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது பதில் அளிக்க முடியாமல் சட்டமன்ற உறுப்பினரும் கலெக்டரும் தப்பி சென்றதால் பரபரப்பு - 23 லட்சம் தற்காலிக பாலத்தால் அரசு பணம் வீணடிப்பு குற்றச்சாட்டு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியிலுள்ள பாலாற்றில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் மாதனூர் - குடியாத்தம் சாலையை இணைக்கும் தரைப்பாலம் இரண்டாவது முறையாக உடைந்து சேதம் ஏற்பட்டதால் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு 30 கி.மீ தூரம் சென்று வரகூடிய சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து துண்டிப்பால் உள்ளி, தோட்டாளம், கோபம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் உள்ளிட்டோர் பார்வையிட வந்தபோது, அதிமுக மற்றும் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பதிலளிக்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்ரவசர அவசரமாக அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்நிலையில், பாலாற்று தரைப்பாலம் அமைக்கும் பணியில் ஊழலுக்கு துணை போன மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் மற்றும் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறீயதாவது,
மாதனூர் குடியாத்தம் சாலையை இணைக்கும் இந்த பாலாற்று தரைப் பாலத்தை 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொழிற்சாலைகள். மற்றும் பல்வேறு பணிகளுக்கு சென்று பயனடைந்து வந்தனர்.
ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கால் உடைந்த ஆற்று தரைபாலத்தை திமுக அரசு மக்களின் வரிப்பணத்தில் 23 லட்சம் செலவு செய்து வீணடிக்கும் வகையில் தரமான மண் சாலை அமைக்கப்படாததால் இரண்டாவது முறையாக தரைப்பாலம் உடைந்து சேதம் அடைந்தது.
இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இது சம்பந்தமாக 23 லட்சம் அரசு பணத்தை வீணடித்து தரமான சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.