வீரமணியை நெருக்கும் வழக்கு?காப்பாற்றும் தேர்தல்!!

வீரமணியை நெருக்கும் வழக்கு?காப்பாற்றும் தேர்தல்!!

 ம.பா.கெஜராஜ்,

 அ.தி.மு.க.வைச் சேர்ந்தமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு,அவருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மற்றும் அவர்து நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரைடு நடத்தியதை அறிவோம்.

 கடந்த 16 ஆம் தேதி நடந்த இந்த ரைடில் ஆற்று மணல் குவியல், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மினி கூப்பர் ஆகிய வெளிநாட்டுக் கார்கள், டாலர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

 அதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரமணி என்னிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய் கார் வெறும் 5 லட்சம் தான், என்றும் எல்லாவற்றுக்கும் தாம் பில் வைத்திருப்பதாகவும், என்னிடம் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது என்று  சொன்னார்.

 அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வேலூர் நீதிமன்ற வளகத்திலுள்ள மாவட்ட முதன்மை நீதிமன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒப்படைத்தனர்.

 இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலிசார் கே.சி.வீரமணிக்கு அழைப்பாணை அளித்து, அவரிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப் போகிறார்கள் என கூறப்படுகிறது.

 இந்நிலையில், கே.சி.வீரமணியை சென்னை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முடிவு செய்துள்ளனராம்

 அப்படி விசாரணை நடத்தும் போதே அவர் கைது செய்யப்படவும் அதிக வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ஒருவேளை கே.சி.வீரமணி கைது செய்யப்பட்டால், அது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மூன்று மாவட்ட தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக போய்விடுமோ என்று யூகிக்கிறார்கள்.

 அதே நேரத்தில் மணல் கடத்தல் தொடர்பாகவும் அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 ஆக,வீரமணி தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.