தி கிரேட் டிக்டேட்டராக தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

ம.பா.கெஜராஜ்,
ஆளுநர் தன்னை தி கிரேட் டிக்டேட்டராக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்திற்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம் என்று பேசி இருக்கிறார்
இதை மையப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பொது மேடைகளில் சர்க்கைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தற்போது சட்டசபை நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
தனது பதவி பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது.
தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனது கடமை முடிந்ததாக இருக்கிறார் ஆளுநர்.
சட்டம் அறிந்தவர் போல் கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதாவைத் திரும்ப அனுப்பிட அதிகாரம் கிடையாது. ஆனால் 17-01-2022 அன்று ஆளுநர் அவர்களாலேயே பரிந்துரைக்கப்பட்டு சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு, பேரவைத் தலைவர் அவர்களால் பண மசோதா என்று 20-10-2022 அன்று சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை அவர் 6-3-2023 அன்று திரும்ப அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர் தெரிந்தும் செய்துள்ளாரா என்பதை பொது மக்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.
இந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்திற்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம் என்று பேசி இருக்கிறார்.
ஆளுநர். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி இருக்கிறார். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியான தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும்.
மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்று உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு வழக்கின் தீர்ப்பில் சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு தி கிரேட் டிக்டேட்டராக தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம்.
எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல.
அதையும் தாண்டி, அதனை சட்டபூர்வமற்ற பொது வெளியில் பகிர்ந்து கொள்வதோடு, நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக மோசமான முன்னுதாரணம் ஆகும். தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் அவர்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும். ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டசபையின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் அவர்கள் பேசி வருவது அவருக்கும் அழகல்ல. அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.
இதனை உணர்ந்து அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு வைகோ காட்டம்!
ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் கவர்னர். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் கொடும் சொற்களை வீசியிருக்கிறார்.
அதே வெளிநாடுகளிலிருந்து கவர்னர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்து விட்டன.
சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்திவைத்தாலே நிராகரிப்பதாகி விடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.