காவல் துறை நிலத்தையே ஆட்டையை போட்ட விவகாரம்! அமைச்சர் நாசர் பதவி இதற்காகத்தான் பறிக்கப்பட்டதாம்! பரபரப்பு தகவல்கள்!!

காவல் துறை நிலத்தையே ஆட்டையை போட்ட விவகாரம்! அமைச்சர் நாசர் பதவி இதற்காகத்தான் பறிக்கப்பட்டதாம்! பரபரப்பு தகவல்கள்!!

 ம.பா.கெஜராஜ்,

 காவல் துறைக்கு சொந்தமான நிலத்தையே ஆட்டையை போட்ட விவகாரம், பால் விநியோகத்தில் மெத்தனம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் அமைச்சர் நாசரின் பதவி பறிக்கப்பட்டது என பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  பால் வளத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கும் நிலையில் எம்.பி. டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நாளை பொறுபேற்றுக் கொள்ளவிருக்கும் நிலையில், நாசரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கு பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.

  தமிழ்நாடு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து, 3-வது ஆண்டில் பதித்துள்ளது.

  கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 மாற்றங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.   இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது அரசியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  அப்படியிருக்க அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பி. ராஜா நாளை (11-ந்தேதி) காலை 10.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார்.

   டி.ஆர்.பி.ராஜா நாளை பதவி ஏற்றப்பிறகு அவருக்கான இலாகா தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும். இந் நிலையில், நாளை அமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில் டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அமைச்சர் ஆவடி நாசர் நீக்கம் ஏன்.

 கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சி சேர்மனாக இருந்த ஆவடி நாசர் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். அமைச்சர் பதவியை இழந்த ஆவடி நாசர் பால்வளத்துறையில் சரியாக கவனம் செலுத்தாததால் அதள பாதாளத்துக்கு அதன் நிர்வாகம் சென்று விட்டதாகவும், பால் தட்டுப்பாடு மற்றும் பால் வினியோகம் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், வந்த பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

   ஆவடி நாசர் ஆரம்ப கால கட்சிக்காரர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விசுவாசி. தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்த காலம் முதல் இவரும் இளைஞரணியில் பொறுப்பு வகித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடும் கட்டளைகளை நிறைவேற்றி வந்தவர். ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக கோட்டை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2 ஆண்டுகளில் அமைச்சரவையில் 2 முறை மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் அமைச்சர்களுக்குள் இலாகா மாற்றங்கள் நடந்துள்ளதே தவிர ஒருவர் கூட அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை. ஆவடி நாசர்தான் இப்போது பதவி இழந்தவர்கள் பட்டியலில் உள்ளார்.

 1980-களில் தி.மு.க. இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்த காலகட்டத்தில் அன்றைய ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக ஆவடி நாசர் இருந்ததுடன் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களிலும் அவருடன் சென்று கட்சிக்காக உழைப்பவராம்.

 கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சி சேர்மனாக இருந்த ஆவடி நாசர் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜனிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்ற ஆவடி நாசர், அடுத்து நடந்த 2021 தேர்தலில் பெரும்பான்மை வித்தியாசத்தில் மாஃபா.பாண்டியராஜனை வீழ்த்தி வென்றார்.

 ஆகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு தனது அமைச்சரவையில் பால் வளத்துறையை கொடுத்தார்.

  அமைச்சரான சில நாட்களிலேயே, தீபாவளி நேரத்தில் 1.5 டன் ஆவின் இனிப்புகளை முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் பால்வளத்துறையில் அதிக கவனம் செலுத்தி வந்த ஆவடி நாசர் அதன் பிறகு அந்த துறையில் நடைபெற்று வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமல் விட்டதால் ஆவின் நிறுவனம் அதள பாதாளத்துக்கு சென்று விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

  பால் உற்பத்தியாளர்கள் கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்துக்கு முழுமையாக பால் ஊற்றி வந்த நிலையில் இப்போது நிலைமை தலைகீழாக போய் பல்வேறு மாவட்டங்களில் தனியார் கம்பெனிகளுக்கு பால் ஊற்றுவதால் ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

 இதை சமாளிக்க மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பால்பவுடரை வாங்கி ஆவின் நிறுவனம் பால் தயாரித்து வருகிறது.

 அது மட்டுமின்றி பல மாவட்டங்களில் பால் வினியோகமும் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. காலை 5 மணி, 6 மணிக்கு கிடைக்க வேண்டிய பால் சில சமயம் காலை 8 மணி, 9 மணிக்குதான் பல பகுதிகளுக்கு செல்கிறது. இது தவிர ஆவின் பால் கொள்முதலில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் அதை அவர் சரி செய்ய தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 ஆவின் நிர்வாகம் எதிர்பார்த்த அளவுக்கு டெவலப்மெண்ட் ஆகவில்லை. உங்கள் பணி போதாது என்று ஏற்கனவே அவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். இந்நிலையில் அமைச்சர் நாசர் மகன் ஆசிம்ராஜாவால் அவருக்கு மேலும் கெட்ட பெயரை உருவாக்கி கொடுத்தது.

  ஆவடி மாநகர செயலாளராகவும் ஆவடி மாநகராட்சி 4-வது வார்டு கவுன்சிலராகவும், தேர்தல் பணிக்குழு தலைவராகவும் இருந்த ஆசிம்ராஜா மேயரை தாண்டி டெண்டர் விவகாரங்களில் தலையிட்டு தனி சாம்ராஜ்யம் செய்து வருவதாக தலைமைக்கு புகார்கள் குவிந்ததுடன், ஒப்பந்ததாரர்களும் அவருக்கு எதிராக திருபினார்கள்.

 மேலும், ஆவடியில் உள்ள 5-வது காவல் பெட்டாலியனுக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க. கொடி நட்டு கடைகள் போடப்பட்டதற்கு ஆசிம்ராஜா பின்னணியில் இருந்ததாக உளவுத்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகார்கள் அனுப்பியது. காவல்துறை நிலத்தையே ஆக்கிரமிப்பு செய்த புகார் காரணமாக ஆசிம்ராஜாவின் மாநகரச் செயலாளர் பொறுப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறிபோனது.

   அப்போதும் ஆவடி நாசரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்து உள்ளார். உங்கள் மகன் மீது அதிக புகார்கள் வருகிறது. கட்டுப்படுத்துங்கள் என்று கூறியிருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த ஜனவரி மாதம் திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கீழே கிடந்த கல்லை எடுத்து தொண்டரை நோக்கி ஆவடி நாசர் வீசிய சம்பவங்களும் கட்சி தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியது.

  இந்நிலையில்தான் பால்வளத்துறையில் உள்ள சில நிர்வாக பிரச்சினைகள் காரணமாக பால் கொள்முதல் மற்றும் வினியோகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் இவருக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இதன் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டதாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை வட்டார தகவல்கள் மூலம் தெரியவருகிறது.