வேலூர் நறுவீ மருத்துவமனையில் மயக்கவியல் மற்றும் கதிரியக்கவியல் முதுகலை மருத்துவ கல்வி தொடக்கம்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனையில் மயக்கவியல் மற்றும் கதிரியக்கவியல் முதுகலை மருத்துவ கல்வி தொடக்கம்
எம்.பி.பி.எஸ். (MBBS) பட்டம் பெற்றவர்கள் வேலூர் நறுவீ மருத்துவமனையில் முதுகலை மருத்துவ கல்வியை பயில இந்திய மருத்துவ கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நறுவீ மருத்துவமனையில் மயக்கவியல் மற்றும் கதிரியக்கவியல் துறையில் DNB எனப்படும் முதுகலை பட்ட மேற்படிப்பு இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த இரு பட்ட மேற்படிப்பிலும் எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் நீட் முதுகலை (NEET-PG) தேர்வின் அடிப்படையில் தலா இரண்டு பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்.
வேலூர் நறுவீ மருத்துவமனை தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டு காலத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம், NABH எனப்படும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவைக்கான தேசிய வாரியம் வழங்கும் அங்கீகார சான்றிதழ், மருத்துவ உபகரணங்களை தொற்று இல்லாமல் சுகாதார முறையில் பராமரிப்பு செய்வதற்க்கான NABH எனப்படும் மருத்துவ சேவை கூட்டமைப்பின் அங்கீகார சான்றிதழ்; உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களை இம்மருத்துவமனை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு தொடங்குவதற்கான அனுமதியும் இம்மருத்துவமனைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
மத்திய அரசின் இந்திய மருத்துவக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின்; நிபுணர் குழுவினர் வேலூர் நறுவீ மருத்துவமனையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள், தேவையான உபகரணங்கள், மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளனர். அதன் அனுமதியை தொடர்ந்து மயக்கவியல் மருத்துவம் (Anaesthesiology) கதிரியக்கவியல் மருத்துவம் (Radio-diagnosis)ஆகியவற்றில் DNB எனப்படும் மூன்று ஆண்டு முதுகலை மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
நீட் (NEET-PG) முதுகலை பட்ட மேற்படிப்பு தேர்வின் தரவரிசையின் அடிப்படையில் இந்த இரு மருத்துவ படிப்பிலும் தலா இரண்டு மாணவர்கள் முதுகலை மருத்துவ கல்வி பயில இந்த ஆண்டு முதல் அனுமதிக்கப்படுவார்கள்.
வேலூர் நறுவீ மருத்துவமனையில் முதுகலை மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்குவதற்கான மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள அனுமதி சான்றிதழை மருத்துவமனை மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத்திடம் வழங்கினார். அனுமதி சான்றிதழை பெற்றுக் கொண்ட தலைவர் சம்பத் நறுவீ மருத்துவமனைக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்திற்கு காரணமான மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
அப்போது மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், இரத்த புற்று நோய் சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பத்மஸ்ரீ மாமன் சாண்டி, தலைமை பொது மருத்துவர் குரியன் தாமஸ், மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் சரவணன் அங்கிசெட்டி, கதிரியக்கவியல் துறை தலைமை மருத்துவர் அசோக் மித்ரா, தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் மற்றும் பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியவர்கள் உடனிருந்தனர்.