காங்கிரஸிக்கு இச்! பா.ஜ.க.வுக்கு பஞ்ச்! கர்நாடக மக்களின் தேர்தல் பரிசு!

ம.பா.கெஜராஜ்,
கர்நாடக சட்டசபைக்கு 224 தொகுதிகளிலும் கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
இதில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளை பிடிக்க வேண்டும். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெறுகிறது.
ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியானது
இதில், காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது.
66 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ள பாஜக கர்நாடகத்தில் ஆட்சியை இழக்கிறது. கடந்த முறை 104 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
இதன் மூலம் காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் பஞ்ச் கொடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு ஓட்டலில் இரவில் தங்க வைத்து, நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, அமைச்சரவை குறித்து இன்று இரவு உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது.
பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த லஷ்மன் சவதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனவும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.