பாகிஸ்தானை வழிநடத்தும் அ-அ-ஆ! அமெரிக்கா சதி- இம்ரான் உரை! நாடாளுமன்றம் கலைப்பு!

ம.பா.கெஜராஜ்,
பாகிஸ்தான் நாட்டை அ-அ-ஆ என்கிற மூன்றும் தான் காப்பாற்றிவருகிறது. அதாவது அல்லா, அமெரிக்கா, ஆர்மி என்று இவை மூன்றையும் மையப்படுத்திதான் அந்த நாட்டின் பாதை அமைக்கப்படுகிறது என கூறுவதுண்டு.
அந்த வகையில் தற்போது நடந்து வரும் பாகிஸ்தான் அரசின் சூழல்களுக்கு அமெரிக்காவே காரணம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
அதேபோல் "பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவில் இம்ரான் கான் பதவிக்கு வந்ததாக பரவலாக கருதப்பட்டவர். ஆனால், அதே ராணுவத்தின் ஆதரவை அவர் இழந்துள்ளதாக பாக்... அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இம்ரானுக்கு ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நெருக்கடியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எதிர்கட்சிகள் விரும்பியது.
இந்நிலையில் தான் பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான ஷபாஸ் ஷெரீஃபால் என்பவரால் மார்ச் 28 அன்று இது தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இம்ரான்கான் அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அல்வி உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், பாகிஸ்தான் அரசியலமைப்பின் 5ஆம் பிரிவுக்கு எதிராக இருப்பதாக துணை சபாநாயகர் அவையில் தெரிவித்தார்.
இந்நிலையில்தான் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் சர்வதேச சதி என்று குற்றம் சாட்டிப் பேசினார்.
அமெரிக்காவின் கொள்கை மற்றும் பிற நாடுகள் மீதான அமெரிக்க கொள்கையை தாம் விமர்சித்து வருவதாக தமது அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்க சதி செய்ததாக அப்போது இம்ரான் கான் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். "நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெளி நாடுக்காரர்கள் அல்ல" என்றும் அவர் உரையில் குறிப்பிட்டார்.
இம்ரான் கான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு எதிர்கட்சிகளும் அமெரிக்காவும் மறுத்துள்ளது தனிக்கதை.
இம்ரானை நீக்கினாலே அமெரிக்க உறவு.
தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உதவியோடு ஒரு வெளிநாட்டு சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கூறிய இம்ரான் கான், இதனை உறுதி செய்யும் அதிகாரபூர்வ ஆவணம் ஒன்றை தேசிய பாதுகாப்பு கமிட்டியும், அமைச்சரவையும் பார்த்துள்ளன என்றும், அதில், இம்ரான் கானை பதவி நீக்கினால், பாகிஸ்தானோடு அமெரிக்காவின் உறவு மேம்படும் என்றும், பாகிஸ்தான் மன்னிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இம்ரான் கான் ஆதாரத்தோடு குற்றம் சாட்டினார்.
இது ஒருபக்கம் இருக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படாததால் எதிர்கட்சி எம்.பிக்கள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.
2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான் கான், ஊழலை தடுத்து பொருளாதாரத்தை சரிசெய்வதாக சபதம் செய்ததன் மூலம் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துப் பிரபலமானார். ஆனால், ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம் மற்றும் வெளிநாட்டுக் கடன் சுமை காரணமாக அவருக்கு மக்கள் ஆதரவு குறையத் தொடங்கியதாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் புதிய தலைவர் நியமனத்தில் கையெழுத்திட கான் மறுத்துவிட்டார்.
இருப்பினும், ராணுவ உயரதிகாரிகளும் இம்ரான் கானும் எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் இணக்கமாக இருப்பதாகவே கூறப்பட்டது, ஆனாலும் அந்நாட்டு ராணுவத்தை அமெரிக்காவே இயக்குவதால் தேவைக்கு ஏற்ப கொக்கி போட்டுக் கொண்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை அதிபர் அல்வி ஏற்றுக் கொண்டதால், அரசு நிர்வாகத்தை நகர்த்திச் செல்ல காபந்து பிரதமர் ஒருவரை அவர் நியமிக்க வாய்ப்புள்ளது.
69 வயதான இம்ரான்கானையும் பாகிஸ்தானையும் அல்லா தான் காப்பாற்ற வேண்டும்