கோலார் தொகுதி வேண்டாம்? சொந்த தொகுதியில் போட்டியிடுங்கள் சித்தராமையாவுக்கு அறிவுரை!

வி.வெங்கட்,
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் வேட்பாளராக உள்ளவர் சித்தராமையா.அவர் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கோலார் தொகுதியில் போட்டியிட வேண்டாம், மாறாக வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் நடக்க வாய்ப்புள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அங்கு அனைத்து கட்சியினரும் வியூகங்கள் வகுக்க தொடங்கி உள்ளன. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் மாநிலம் முழுவதும் யாத்திரைகள் நடத்தி வருகின்றன.
கடந்த 2018 ம் ஆண்டு நடந்த தேர்தலில் சித்தராமையா தான் எம்எல்ஏவாக இருந்த மைசூரு மாவட்டம் வருணா தொகுதியை மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்துவிட்டு அங்குள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் பாதாமியில் மட்டும் சித்தராமையா வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் தற்போது சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததுடன், கோலார் தொகுதிக்கு சென்று அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளையும் செய்தார். இங்கு சித்தராமையா சார்ந்த குருபா சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம் மக்கள் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் உள்ளதால் அவர் கோலார் தொகுதியில் கண்வைத்தார்.
ஆனால் உட்கட்சி பிரச்சனை என்பது அவருக்கு மைனஸாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் ஆலோசனை இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக டெல்லியில் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் எச்சரித்தனராம்.
அதாவது கட்சி சார்பாக சர்வே மேற்கொள்ளப்பட்டதில் கோலாரில் வெற்றி பெறுவது என்பது சுலபமாக இருக்காது. சிரமப்பட வேண்டி இருக்கும். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடையேயான பிரச்சனை என்பது தேர்தல் வெற்றியை பாதிக்கும்.
மேலும் பாஜக, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சேர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வேறு தொகுதியில் போட்டியிட வேண்டும். மேலும் வரும் தேர்தலில் மகன் யதீந்திராவுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். முதலில் உங்களின் வெற்றி பற்றி யோசனை செய்யுங்கள். இதனால் மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுங்கள் என கூறினார்களாம்,
அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக உள்ளதால் அனைத்து இடங்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். இதனால் வெற்றி வாய்ப்புள்ள சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்களாம்.