ரேஷன் கடைகளில் மே மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்! கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல்!

ரேஷன் கடைகளில் மே மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்! கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல்!

 ஆர்.ரமேஷ்,

  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச இதய பரிசோதனை மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

   இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருடத்திற்கு 19,809 கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில் எடை அதிகமாகவுள்ளவர்கள், இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைராய்டு நோய் உள்ளவர்கள் மற்றும் இருதய நோய் சம்மந்தமான அறிகுறிகள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை அழைத்து வந்து எக்கோ மற்றும் ஈசிஜி பரிசோதனை இந்த முகாமில் செய்யப்பட்டது.

 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்  என்ற வள்ளுவனின் வாக்கு கேற்ப ஒரு நோயை வருவதற்கு முன்பாக ஆய்ந்து மருத்துவம் செய்கின்ற பொழுது பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

 கர்ப்பிணி தாய்மார்களின் உயிரை பாதுகாப்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்டது மற்றும் இரண்டு குடும்பங்களின்  எதிர்கால வாழ்வு அவர்களை சார்ந்துள்ளது.

 அதனால் தான் கருவுற்ற தாய்மார்களின் நலனை தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அனைவரும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், உணவுகளில் கீரை வகைகள் காய்கறிகள் பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை இரண்டு முறை பாலிஷ் செய்யும் போது நெல்லுடன் சேர்ந்துள்ள சத்துப் பொருட்கள் வெளியேறி விடுகின்றன. இதனை நாம் உட்கொள்ளும் போது நமக்கு தேவையான சத்துப் பொருட்கள் நம்முடைய உடலில் சேர்வதில்லை.

 நமது மாவட்டத்தில் வருகின்ற மே மாதம் முதல் அனைத்து நியாய விலை கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படவுள்ளன. நீங்கள்அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு நலமோடு வாழ வேண்டும்.

 முளைகட்டிய கோதுமை, பாதாம், பிஸ்தா போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சத்துமாவினையும் கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

 உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே வீட்டிலேயே கம்பு, ராகி போன்ற சிறுதானிய உணவு பண்டங்களை தயார் செய்து வழங்கினால் அவர்களுக்கு மிகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். எந்த ஒரு உடல் உபாதைகள் ஏற்படாது. இந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச இதய பரிசோதனை மருத்துவ முகாமில் பங்குபெற்று மருத்துவர் பரிந்துரைக்கின்ற அனைத்து விதமான மருத்துவ ஆலோசனைகளையும் கேட்டு அதன் மூலமாக பயன்பெற்று, நீங்கள் அனைவரும் நலமோடு வாழ வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

 மாவட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச இதய பரிசோதனை மருத்துவ முகாமில் 258 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மரு.மாரிமுத்து, துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு.செந்தில், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு.சிவகுமார், சேலம் கோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் திரு.அர்த்தனாரி, அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் மரு.பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் திருமதி.மீனாட்சி, திருமதி.சௌந்தர்யா,  மருத்துவக் குழு உறுப்பினர்கள், அரசு மருத்துவமனை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.