அடிப்படை வசதிகளை செய்து விட்டு சம்பளம் வாங்குங்கள்!

ஜி.கே.சேகரன்,
நகராட்சி 32-வது வார்டு அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் பொதுமக்கள், இருட்டில் தான் வாழ்கிறோம் என குமறுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு தில்லைநகர் திருத்தி மேடு பகுதியில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்காக சுமார் 18 வருடங்களுக்கு முன்பு இலவசமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள மக்கள் சொந்தமாக வீடு கட்டியும் அந்த வீட்டிற்குள் வாழ முடியாத அவல நிலையில் தவித்து வருகின்றனர். அடிப்படை வசதி இல்லாததே அதற்கு காரணம்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்த பகுதியில் சாலை, குடிநீர், கால்வாய், மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் நகராட்சியின் மூலமாக எங்களுக்கு கிடைக்கவில்லை.
சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்தும் இன்னும் எங்கள் பகுதி இருண்டு கிடைக்கிறது.
எங்கள் பகுதி முழுவதும் நகராட்சியின் மூலம் சுத்தம் செய்யப்படாமல் முள்ளும் புதருமாக இருப்பதால் பாம்புகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
இதனால் இரவில் தைரியமாக நடமாட முடிவதில்லை.
மழை பெய்து விட்டால் சேறும் சகதியுமாக சாக்கடை கழிவுகள் தேங்கி குளம்போல் நின்றுவிடுகிறது.
இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு நடுவில் நாங்கள் வீடு கட்டியும் அந்த வீட்டிற்குள் வாழ முடியாத அவல நிலையில் தவித்து வருகிறோம்.
இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாமல் எங்களை அலைகழித்து வருகின்றனர்.
இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் துறை சார்ந்த அதிகாரிகள் எங்கள் மேல் கருணைகொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதிக்கு வந்து போராட கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.
மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெறும் அரசு ஊழியர்கள் இப்படி நடந்துக் கொள்வது அவர்கள் பதவிக்கு அழகா. அடுத்த மாதம் சம்பளம் வாங்கும் போதுஉங்கள் மனதில் உறுத்த வேண்டும்.
எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்துவிட்டு மனசாட்சியோடு சம்பளம் வாங்கிக் கொள்ளுங்களேன் என்று மக்கள் சொல்கிறார்கள்.