தோல் கழிவு நீரினை நிலத்தில் தேக்கிய தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு -மாவட்ட ஆட்சியர் அதிரடி!

ஆர்.ரமேஷ்,
தோல் கழிவு நீரினை நிலத்தில் தேக்கிய தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு - மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
வாணியம்பாடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வின் போது ஜலால் ரோடு, மலிகைதோப்பு பகுதி, ஆம்பூர் வட்டத்திலுள்ள தி/ள். ஹபீஸ் பிரைம் டேனரி தொழிற்சாலை ஆனது கழிவு நீரினை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திரிப்பு செய்யாமல் நிலத்தில் தேக்கி வைத்து இருப்பது அறியப்பட்டது. எனவே, அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவியது. அதன் காரணமாக மூடுதல் உத்திரவு மற்றும் மின் இணைப்பு துண்டிக்க மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு. வெ. கோபாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரை ஏற்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியர், இ.ஆ.ப. அவர்கள், மின் இணைப்பினை துண்டிக்க உத்திரவிட்டார். எனவே தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இயக்கம் நிறுத்தப்பட்டது.
தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரினையோ அல்லது திடக்கழிவுகளை நிலத்தின் மேல் அல்லது நீர் நிலைகளில் வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடுதல் உத்திரவு அளிக்கப்படும் என்றும் மேலும் உரிமையாளர்கள் மேல் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்தவிதமான அன்றாட உபயோக கழிவு நீரை ஆற்றிலோ / கழிவுநீர் வாய்க்காலிலோ வெளியேற்றம் செய்யக்கூடாது என்றும் அதற்கு அமைப்பு எதுவும் இருந்தால் அவைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.