"நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தை சூப்பராக நடத்திய திருப்பத்தூர் ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,
நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை சூப்பராக நடத்திய திருப்பத்தூர் ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள், டீக்கடைகளில் நெகிழிப் பொருட்களின் மூலம் உணவுகளை உட்கொள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும், அதற்கு மாற்றாக வாழை இலை பாத்திரங்கள் கண்ணாடி டம்ளர்களை உபயோகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் தூய்மை பணியை மேற்கொண்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நெகிழி பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிகின்ற நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் ஏன் என்றால் ஒரு காலத்தில் இந்த உலகம் எங்கு பார்த்தாலும் பசுமையாக இருந்திருக்கும் தற்பொழுது எங்கு பார்த்தாலும் நெகிழி குப்பைகளாக காட்சியளிக்கிறது, இதனால் நிலத்தடி நீர்மட்டத்தை உயரவில்லை.
மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் போகின்றது. நிலத்தடி நீர்மட்டம் உயராமல் போனால் தாவரங்கள் மாண்டு போகும், நமக்கு தேவையான நீர் கிடைக்காது, இது மட்டுமல்லாமல் தூக்கி எறிகின்ற நெகிழி பொருட்கள் ஆறுகள் மூலமாக கடலில் அடித்து செல்கிறது குளங்கள் ஏரிகளில் சென்று சேர்கிறது.
ஆற்றுக்குள் செல்கின்ற பொழுது 0.5 எம் எம் குறைவான அளவிற்கு அந்த பிளாஸ்டிக் துகள்களாக மாறுகின்றன. இந்த துகள்கள் எந்த காலகட்டத்திலும் மக்காது, இதற்குப் பெயர் மைக்ரோ பிளாஸ்டிக். இந்த மைக்ரோ பிளாஸ்டிக் உப்பின் மூலமாக திரும்பவும் நமது உடம்பிற்கு வந்து சேர்கின்றது. நெகிழிகளை எரிக்கின்ற பொழுது டைஆக்சின் என்ற வாயு வெளிப்படுகிறது, அந்த டைஆக்சனை நாம் சுவாசிக்கும் பொழுது நமது உடம்பில் கொழுப்பை சேமித்து வைக்கின்ற, அடிபோஸ் திசுக்களின் இடையே சேமிக்கப்படுகிறது. மனிதர்கள் உடம்பில் மட்டுமல்ல வாழ்கின்ற அனைத்து உயிரினங்களிலும் இந்த வாய்வானது சேமிக்கப்படுகின்றது. நாம் சுவாசித்த டைஆக்சின் வாயுவானது நமது உடம்பிலிருந்து வெளியேற 11 ஆண்டுகள் ஆகின்றது.
பிளாஸ்டிக் பாட்டில்களை அடிக்கடி பயன்படுத்தும் பொழுது வெளுத்து போய் விடுகின்றது, இதன் மூலம் புற்றுநோய் உண்டாக சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது. மேலும் அடுத்த தலைமுறைகளுக்கும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழலுக்கும் நமது உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறது. மேலும் உணவகங்களில் டீக்கடைகளில் நெகிழிப் பொருட்களின் மூலம் உணவுகளை உட்கொள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.
அதற்கு மாற்றாக வாழை இலை பாத்திரங்கள் கண்ணாடி டம்ளர்களை உபயோகிக்க வேண்டும். கடைகளில் நெகிழிப் பைகளை கொடுத்தாலும் வாங்காதீர்கள். மேலும் நெகிழிப் பைகளை விற்பவர்களை பஞ்சாயத்துகளில் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இதில், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பேட்டையில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் நடைபெற்ற தூய்மை பணியின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வழங்கிய இளநீரை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வயதான மூதாட்டிகளுக்கு இளநீரை வழங்கி மகிழ்ந்தார்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி காமராஜபுரம் கிராம அங்கன்வாடி மைய வளாகத்தில் 24 சென்ட் பரப்பளவில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செடிகளை நட்டு துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். மேலும் இந்த காய்கறி தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சந்தித்து நீங்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளில் உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருமதி.விஜயகுமாரி, வட்டாட்சியர் திரு.குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.துரை, உள்ளாட்சி பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.