பிக்கப் வேன் நூறு அடி பள்ளத்தில் விழந்து விபத்து! ஒரே கிராமத்தைச் சேர்ந்த 11 பெண்கள் பலி:- கலெக்டர் மீது பொதுமக்கள் அதிருப்தி!

ஜி.கே.சேகரன்,
ஜவ்வாது மலையில் பிக்கப் வேன் ஒன்றில் சுமார் 35 பேர் பயணித்த நிலையில், அந்த வேன் நூறு அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 11 பெண்கள் பலியானார்கள். உயிரிழந்த 11 பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட் பின்னர் சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடைசிவரை எட்டிப்பார்க்காத மாவட்ட ஆட்சித் தலைவரால் பொதுமக்கள் அதிருப்தி.
ஜவ்வாது மலை புதூர்நாடு அடுத்த சேம்பரை பகுதியில் உள்ள கோயிலுக்கு டிப்பர் பிக்கப் லாரியில் சென்ற புலியூர் கிராமத்தை சேர்ந்த 35 நபர்கள் விபத்துக்குள்ளாகினர்.
அப்போது சம்பவ இடத்தில் உயிரிழந்த 6 பெண்கள் உட்பட சிகிச்சை பலனின்றி மொத்தம் 11 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் குமரவேல் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அனைவரின் உடல்களையும் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் சொந்த ஊரான புலியூர் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்தில் சுகந்தி(55),துர்கா(40)பரிமளா (12),செல்வி (35),மங்கை (60),பவித்ரா (18) ஜெயப்பிரியா (16), திக்கி அம்மாள் (47),சின்னதிக்கி (22),அலமேலு(12), சென்னம்மாள்(12) என சுமார் 11 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் சம்பவம் நடந்த இடத்திலும் அரசு மருத்துவமனையிலும் வந்தனர்.
அவரவர் தங்களுடைய கடமையை துரிதமாக செய்ய முற்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா மட்டும் கடைசி வரை சம்பவ இடத்திற்கும் வராமல், மருத்துவமனைக்கும் வராமல் தவிர்த்துவிட்டாராம்.
இந்த மாபெரும் துயர சம்பவத்தை கண்டு கொள்ளாத அவர் திருப்பத்தூரில் நடைபெறும் இலக்கிய புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள சென்று விட்டாராம். இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அப்பட்டியிருக்க பலத்த படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மக்களும், திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
பலரை டோலிகட்டி தூக்கிச்சென்றனர்.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயிலுக்கு சென்று போது ஏற்பட்ட விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 11பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிரிழந்த அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தை பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், வருத்தத்தையும் தந்திருப்பதாகவும் பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை டுவிட் செய்திருக்கிறார்.
அதே போல் அதிமுக இண ஒருங்கிணைப்பாளர் கே.பழனிச்சாமி, இந்த செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களுடைய ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாறவும், காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பு:-நாம் விசாரித்த வகையில் மீட்புப் பணிகளை துரிதமாக செய்திட உத்தரவிட்டது மாவட்ட ஆட்சியர் தான் என்று தெரிகிறது.