கோவில் உண்டியலில் திருடிய பணத்தை திருப்பி போட்ட யோக்கியன்!உருக்கமான கடிதம்!!
கே.கெங்கா,
கோவில் உண்டியலில் பணத்தை திருடியவன், மனம் திருந்தி அந்த பணத்தை அதே உண்டியலில் திருப்பி போட்டுள்ளான் கூடவே ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளான்.
இது குறித்த விவரம் வருமாறு,
இராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கோயில் வளாகத்தில் 1008 சுயம்பு லிங்கங்கள் உள்ளது. சித்ராபௌர்ணமி நடைபெற்ற சில தினங்களுக்குள், இங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சிப்காட் போலீசில் புகார் செய்திருந்தனர்.
ஆனால் வழக்கம் போலவே போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று கோவில் நிர்வாகத்தினர்1008 சுயம்பு லிங்கங்கள் முன்பு வைத்திருந்த உண்டியலை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்தனர். அப்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணத்துடன், மேலும் ஒரு கடிதமும் அதனுள் 500 ரூபாய் நோட்டுகள் 20 இருந்தது. (ரூ 10,000).அந்த சீட்டை பிரித்துப் பார்த்தபோது அதில்,என்னை மன்னித்து விடுங்கள். நான் சித்ரா பௌர்ணமி கழித்து நான் தெரிந்தே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன்.
அப்போது இருந்து எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியில்லை. அப்புறம் வீட்டில் நிறைய பிரச்சினை வருகிறது. எனவே நான் மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே உண்டியலில் ரூ 10,000 போட்டு எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளும் என்னை மன்னிப்பாரா தெரியாது. வணக்கம்.'என்று எழுதப்பட்டிருந்தது.
அதிர்ச்சியும் அடைந்த கோயில் நிர்வாகத்தினர் இந்த கடிதத்தை சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் மனம் திருந்தி மீண்டும் பணத்தை உண்டியலில் மன்னிப்பு கடிதத்துடன் செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.