உயர் நீதிமன்ற உத்தரவை ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் நிறைவேற்றுவாரா?

  உயர் நீதிமன்ற உத்தரவை ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் நிறைவேற்றுவாரா?

ம.பா.கெஜராஜ்,

 சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை காவல் துறை நிறைவேற்றுமா? குறிப்பாக ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் நிறைவேற்றுவாரா என்று நிலத்தின் உரிமையாளர் ஒருவர் கண்கலங்க கேட்கிறார்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை, முத்தனூர் கிராமத்தில் பஹீம் என்பவருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. கூடவே இந்த நிலத்தின் மீது பல சர்ச்சைகளும் இருக்கின்றன. முறையான நடவடிக்கை எடுக்காத போலிசாரே இதற்கெல்லாம் காரணம்.

 இப்படிக்கூறும் உரிமையாளர் பஹீமின் கணவர் இக்பால் என்பவரிடம் பேசினோம்.

  எங்கள் நிலத்தில் உள்ள செயற்கையான சர்ச்சைகளுக்கான தீர்வை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2019 ஆண்டு அளித்தது. அதாவது நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், புகார்தாரர் மற்றும் எதிர்தரப்பினரை ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் அழைத்து விசாரித்து உரியவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது.

  அதன்படி அப்போதிருந்த ஜோலார்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி இருதரப்பினரையும் அழைத்து விசாரித்த போது,  பஹீம் தரபினரிடம் (எங்களிடம்) தான் நிலத்தின் அசல் ஆவணங்கள் உள்ளன. எதிர்தரப்பினரிடம் ஒரு துண்டு ஆவணமும் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டார்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் அறிக்கையும் தயார் செய்தார். அவை நீதிமன்றத்தின் பார்வைக்கும் வைக்கப்பட்டது.

 பின்னர் நிலத்துக்கு செல்ல பல முறை காவல் நிலையத்தை அனுகியும் எங்களுக்கு பரிகாரம் கிடைக்கவில்லை.

 அதற்கு பின்னர் சொந்த நிலத்துக்கு சென்ற எங்களையும், நிலம் வாங்குவதற்காக எங்களுடன் வந்த வந்த  தர்மபுரி பழனி ஆகியோரையும் எதிர்தரப்பினர் அடித்து உதைத்து மண்டையை பிளந்துவிட்டனர்.

 ஆனால் ஏலகிரிமலை போலிசாரோ, அடிவாங்கிய எங்கள் தரப்பினர் மீது பொய் வழக்கு போட்டனர்.

 அதன் பின்னரும் இரண்டு மூன்று சம்பவங்களில் நிலத்தின் உரிமையாளர்களை எதிர்தரப்பினர் தாக்கி தடுக்கிறார்கள்.

 இந்நிலையில் நிலத்தின் உரிமையாளரான பஹீம் (எனது மனைவி) சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாடி ரிட் மனுதாக்கல் செய்தார். 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த இந்த மனுவின் மீது கடந்த மாதம் தீர்ப்பு வெளியானது.

 அதில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு விசாரித்து அறிக்கை செய்திருக்கிறார். அதன்படி தற்போது நிலத்தில் வீடுகட்டும் பணியை தொடங்கவும், பாதுகாப்பு அளிக்கவும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டரிம் புதியதாக ஒரு புகார் மனு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

 அதன்படி 05.09.2022 ஆம் தேதி என்னுடைய நிலத்துக்கு செல்கிறேன், நீதிமன்ற உத்தரவுபடி பாதுகாப்பு அளிக்க கோரும் புதிய புகார் மனுவையும், நீதிமன்ற உத்தரவின் நகலையும் எடுத்துக் கொண்டு நாங்கள்  இரண்டு மூன்று முறை ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்றோம். ஆனால் புகார் மனுவை அங்கிருந்த போலிசார் பெறவில்லை. ஆகவே நாங்கள் ஏற்புச்சான்றுடன் கூடிய பதிவுத்தபாலில் ஜோலார்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு புகாரையும், தீர்ப்பின் நகலையும் அனுப்பிவைதோம்.

 தபால் கிடைத்தும் கூட எங்களை இன்ஸ்பெக்டர் அழைத்து விசாரிக்கவில்லை. ஆகவே நேரில் காவல் நிலையம் சென்ற போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் என்னால் எதுவும் செய்ய முடியாது, எஸ்.பி.யை போய் பாருங்க, டிஎஸ்பியை பாருங்க என்று சொன்னார்.

   இன்ஸ்பெக்டரிடம் தான் புகார் கொடுக்க வேண்டும்,  நீதிமறம் அப்படித்தான் உத்தரவிட்டுள்ளது என்றதும், ஸ்டேஷனில் இருந்த காவலரிடம் எனது புகாரை எடுத்து வரச்சொல்லி படித்தார். பின்னர் ஏலகிரி காவல் நிலையத்துக்கு சென்று சி.எஸ்.ஆர் வாங்கிக் கொள்ள சொன்னார்.

 அதற்கு ரெண்டு மூன்று நாட்கள் திரிந்தோம்.. ஒரு வழியாக 29 ஆம் தேதி சி. எஸ். ஆர் கொடுத்துவிட்டு மூன்று கையெழுத்து பெற்றுளார்.

 இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பதைப் போலவே 05.09.2022 ஆம் தேதி என்னுடைய நிலத்துக்கு வீடு கட்ட செல்வதற்காக ஆயத்தமாகிவருகிறோம். அதற்கு நீதிமன்ற உத்தரவின்படி போலிசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.

 இது குறித்து சமந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி என்பவரிடம் பேசியபோது, அந்த முத்தனூர் கிராம நிலத்தைப்பற்றி அரசாங்கத்துக்கு எழுதியிருக்கிறோம். அங்க 15 வழக்குகள் உள்ளன. மனுதாரர்கள் எஸ்.பி.யை பார்க்க சொல்லுங்கள் என்றவர் விசாரிப்பதாக சொன்னார்.

   வழக்கறிஞர் திரு.பூ.ராஜகுருவிடம் பேசினோம், நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ள அதிகாரியிடம் மனுதாரர் புகார் கொடுக்க வேண்டும். அந்த புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரி உயர் அதிகாரிகளைப் போய் பார் என்று தட்டிக் கழிக்கக்கூடாது.

   இது போன்று நீதிமன்ற உத்தரவுகளில் புகாரை பெறுவதில் அலட்சியம் காட்டுவதும் மேலும் அந்த புகார்தாரருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காமல் இருப்பதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

  அந்த அதிகாரியின் மீது நீதிமன்ற அவமதிப்பு கூட தொடரலாம் மேலும் சமீபத்தில் பெங்களூரு உயர்நீதிமன்றம் இது போன்று புகாரை வாங்க மறுக்கும் காவல் ஆய்வாளரை ஒரு வாரம் தெருவை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் என்று வினோத உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

 இது போன்ற பல வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உயர்நீதிமன்றம் அளித்து வருகிறது. புகாரை பெற தவறும் அரசு அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை பிடித்து புகார் தாரர்களுக்கு அளித்து வருவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

 இதற்கு மேலாவது அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியம் செய்யாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று சொன்னார்.