காட்டன் சூத்தாட்டம் கனஜோர்! சி.எம்.சி. அருகில் பரபர!

 ரா.மதன்,

 வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவது பலரும் அறிந்ததே.

 குடியாத்தம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லாட்டரி பிசினஸைப் போலவே காட்டன் சூதாட்டத்துக்கும் தலைமையிடம் குடியாத்தம் தான்.

 ஏழை மக்களை சுரண்டும் அப்படிப்பட்ட காட்டன் சூதாட்டம் வேலூரின் மையப்பகுதியில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு அருகில் நடந்து வருகிறது. இதற்காகவே பக்காவாக கடைபோட்டு ஸ்டாப்களை நியமித்து ஏழைகளின் பணத்தை பறித்து வருகிறார்கள்.

   மேற்படி ஏரியாவில் உள்ள காதிபவனுக்கு அருகில் செயல்படும் இந்த சூதாட்ட விடுதியின் உரிமையாளரின் பெயர் குப்புசாமி. சாட்சாத் இவர் குடியாத்தம் என்கிறார்கள்.

 இவர் தமக்கு நம்பகமான நபர்களை உடன் வைத்துக் கொண்டு, வேலூர் பழைய பேருந்து நிலையம், மார்க்கெட் வீதி, பஜார் வீதி, சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ., ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே என இன்னும் பல இடங்களில் காட்டன் சூதாட்டம் நடத்தி வருகிறார்.

  குப்புசாமி நடத்தும் காட்டன் சூதாட்டத்தில் முப்பத்தி ஐந்து ரூபாய் செலுத்தி எழுதினால், பரிசு விழுவோருக்கு 17,000/- ரூபாய் கொடுப்பார்கள்.

  ஆனால் இந்த பரிசு எப்போதாவது ஒரிருவருக்குத்தான் அடிக்கும், மற்றபடி உழைப்பாளிகளிடம் வசூல் செய்த பணம் சுவாஹா.

 இந்த சூதாட்டத்தில் பல கூலி தொழிலாளிகளும், சூதாட்ட பிரியர்களில் பலதரப்பட்டவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பணம் கட்டி ஏமாந்து வருகிறார்கள்

  ஆகவே சூதாட்ட முதலாளிகள் ஏழை மக்களை குறிவைத்து இந்த சூதாட்டத்தை பரபரப்பான இடங்களில் சுதந்திரமாக நடத்திவருகிறார்கள்.

 இது வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியாகும்.