15 போலிசார் மீது புகார்! குற்றவாளிகளுக்கு ஜாதியும்..அமைப்புகளும் கேடயமாகிறதா?

ம.பா.கெஜராஜ்,
15 போலிசார் மீது கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், குற்றவாளிகளுக்கு ஜாதியும்..அமைப்புகளும் கேடயமாக செயல்படுகிறதா என்று முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் தில்லை நகரைச் சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அதில் மூன்று பேர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அம்மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் இ.ஆ.ப. அவர்களிடம் இது தொடர்பாக மனு ஒன்று அளிக்கப்பட்டிருப்பதே அதற்கு காரணம்.
கைதானவர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் மனைவி புவனேஷ்வரிதான் புகார்தாரர்.
அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 14ஆம் தேதி இரவு சுமார் சுமார் 11.45 மணியளவில், புவனேஸ்வரியின் கணவர் பிரகாஷ் அவரது உறவினரான தர்மராஜ், செல்வம் ஆகியோர் தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, சீருடை அணியாத காவலர்கள் அடித்து வேனில் இழுத்துச் சென்றனர்.
அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், திங்கட்கிழமையன்று சின்னசேலம் காவல் நிலையத்திற்கு சென்ற போது அங்கு அவர்கள் இல்லை. மேலும் விசாரித்த போது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது.
தாங்கள் பட்டியலின குறவர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும் படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதாலும் தங்களது சமூகத்தை காவலர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் அந்த 15 காவலர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புவனேஸ்வரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்த மனுவில் கோரியிருந்தார்.
இது தொடர்பாக, கள்ளக்குறிச்சி காவல் துறையினர் தெரிவித்ததாவது,"கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று இருவரை விடுவித்து விட்டோம்.
வழிப்பறி, கொள்ளை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக மூன்று பேரது கை ரேகைகள் ஒத்துப்போகின்றன.
இந்த நபர்கள், சின்ன சேலம், கீழ் குப்பம், கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என சொன்னார்கள்
குற்றம் சாட்டப்பட்ட இந்த மூன்று பேரும் 22 குற்றங்களை ஒப்புக்கொண்டிருப்பாதாகவும் 12 வழக்குகளில் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட செல்வம் என்பவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் பிரகாசையும் தர்மராஜையும் கட்டை விரலைக் கட்டித் தொங்க விட்டதாகவும் அவர்கள் கத்தியதைத் தன்னால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லையென்றும் அந்த அளவுக்குக் காவல்துறை சித்ரவதை செய்ததாகவும் செல்வம் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கீழ்க்குப்பம் மற்றும் கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது.
"இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அன்று பெரிய சிறுவத்தூர் ரயில்வே நிலையம் ரோட்டில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்தவர் கழுத்தில் இருந்து 5 பவுன் தாலி செயினையும் அவரது மகள் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலியையும் பறித்து சென்றதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைரேகை நிபுணர் மூலம் தடயம் சேகரிக்கப்பட்டு பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு சோதனை செய்தபோது பிரகாஷ் என்பவரது கைரேகையுடன் ஒத்துப்போனது. அவர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த ஒருவரது வீட்டில் சுமார் 400 கிராம் எடைகொண்ட வெள்ளி பொருட்கள், ரூ. 25,000 ஆகியவற்றை யாரோ மர்ம நபர் திருடி சென்றதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் தர்மராஜ் என்பவரது கைரேகைகளுடன் ஒத்துப்போயின. இதையடுத்து தர்மராஜ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த வழக்குகளில் பிரகாஷ் மற்றும் தர்மராஜ் இருவரும் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
மேலும் தங்களுடன் சிலர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தர்மராஜின் சகோதரர் சக்திவேல் என்பவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவரும் தனக்கு இந்தக் குற்றங்களில் பங்கிருப்பதாக ஒப்புக்கொண்டார்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய சிறுவத்தூர், எலவடி, மேலூர், எரவார், எலியத்தூர், தென்செட்டியேந்தல், கனியாமூர், அம்மையகரம் உள்ளிட்ட பகுதிகள், கீழ்க்குப்பம் காவல் எல்லைக்கு உட்பட்ட பெத்தாசமுத்திரம், அரியலூர் பகுதிகள், கச்சிராயபாளையம் எல்லைக்கு உட்பட்ட தெங்கியாநத்தம், வடக்கந்தல் பகுதிகள், கள்ளக்குறிச்சி எல்லைக்கு உட்பட்ட ராமசந்திரா நகர் ஆகிய இடங்களில் இவர்கள் மூவரும் 13 இடங்களில் இவர்கள் களவாடியதாக கண்டறியப்ட்டது.
இதில் சுமார் 25 சவரன் நகை சின்ன சேலம் நகைக் கடையிலும் 13 சவரன் நகை கள்ளக்குறிச்சி நகைக் கடையிலும் என மொத்தமாக 38 சவரன் மீட்கப்பட்டது.
இதில் தர்மராஜ்,சக்திவேல் மற்றும் பிரகாஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை இவ்வாறு தெரிவித்துள்ள நிலையயில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர்களுக்கு ஆதரவாக பல்வேறு பெயர்களில் அமைப்புகள் அவர்களுக்கு கேடயமாக முன்வருவது வழக்கின் போக்கை திசைமாற்றக்கூடும் என்பது ஒய்வு பெற்ற காவல் அலுவலர் ஒருவரின் கூற்றாக உள்ளது.
எதற்கெடுத்தாலும் பட்டியலினம், சித்ரவதை செய்துவிட்டனர், பொய் வழக்கு போட்டுவிட்டனர் என்கிற கோஷங்கள் பெருகி வருகின்றன.
மறுபக்கம் பொருட்களை பறி கொடுத்தவர்கள், சீக்கிரமாக கண்டுபிடிக்கமாட்டீங்களா என்று போலிசை குறை சொல்கிறார்கள்.
மீடியாக்கள் உண்மையை எழுத வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் உண்மையான குற்றவாளியா இல்லையா என்பது போலிசுக்கே தெரியாது. குற்றத்தை இருதரப்பும் நீதிமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும்.
அப்படியிருக்க இந்த அமைப்புகளுக்கு என்ன தெரிந்து விடப்போகிறது.
பல சம்பவங்களில் குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இது பொன்ற அமைப்புகளை கையில் வைத்துக் கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது.
அதற்கேற்றவாறு ஒரு சில அமைப்புகளும் கண்மூடித்தனமாக அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மீது பொய்யான புகார்களை அளித்து எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏகப்பட்ட தொல்லைகள் வர காரணமாகவிடுகிறார்கள்.
போலிசில் அடிக்கக்கூடாது,. டார்ச்சர் செய்யக்கூடாது என்பது சரிதான். அதற்காக மயிலே மயிலே என்றால் இறகு போடுமா. சில நேரங்களில் சாஃப்ட் கார்னரை தூக்கி ஓரம் வைக்கத்தான் வேண்டியிருக்கு.
அந்த வகையில் பல பெரிய குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.