ஒட்டு போட்ட ஆண் சட்டை அணிந்து பெண்கவுன்சிலர் கலக்கல்!

சபரி.ஈஸ்வரன்,
ஒட்டுப்போட்ட ஆண் சட்டை அணிந்து பெண் கவுன்சிலர் கலக்கல் ஆர்பாட்டம் செய்தார்,
இது பற்றின விவரம் வருமாறு,
மதுரை மாநகராட்சிக்கு மேயராக இந்திராணி, துணைமேயராக நாகராஜன் என்பவரும் உள்ளனர்.
இந்நிலையில் 27.07.2022 ஆம் தேதி மேயர், மேயர் நாகராஜன், கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் மாநகராட்சி நடந்தது.
அப்போது எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா: சொத்து வரி வசூலிக்கும் சில அலுவலர்கள் கட்டட உரிமையாளர்களுடன் 'டீலிங்' வைத்துள்ளனர். கட்டடத்தை குறைவாக அளவிட்டு வரியை குறைத்து நிர்ணயித்துள்ளனர். முறைகேடு அலுவலர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி உயர்வு குறித்து மக்களிடம் நேரடியாக கருத்து கேட்டு விண்ணப்பம் வழங்க வேண்டும் என அரசாணை சொல்கிறது.
அதை கருத்தில் கொள்ளாமல் விண்ணப்பம் வழங்குகிறார்கள். அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு அலுவலகம் அமைக்க நிதி தராததால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தரும் நிதியில் அமைத்து கொள்கிறோம். இடம் மட்டும் மாநகராட்சி தர வேண்டும். முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம், நாங்கள் வழங்கிய சூப்பர் சக்சன் லாரி என்ன ஆனது என தெரிய வேண்டும் என்றார்.
மண்டலம் 4 (தெற்கு) முகேஷ் சர்மா: அரசு மருத்துவமனை அருகே பல பாதாள சாக்கடைகளில் மனித உடல் உறுப்புகள் கிடப்பது அதிர்ச்சி தருகிறது. மாநகராட்சி பள்ளி மாணவியரின் பாதுகாப்பு குறித்து சுற்றறிக்கை விட வேண்டும்.
பழுதான பள்ளி கட்டடங்களுக்கு பதில் புதிதாக கட்ட வேண்டும். தெப்பக்குளம் நான்கு கரை ரோடுகளையும் பராமரிப்பது மாநகராட்சி தான். ஆனால் அங்கு கடைகள் வைக்க ஹிந்து சமய அறநிலையத் துறை ஒப்பந்தம் கோரியுள்ளது. இதனை மாநகராட்சி வசம் எடுத்தால் வருவாய் பெருகும் என்றார்.
மண்டல வாரியாக கவுன்சிலர்களிடம் குறைகள், தேவைகளை கேட்டறிந்த மேயருக்கு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தனர். 'அதிகாரிகள் எங்களை மதிப்பதில்லை, போனை 'சுவிட்ச் ஆப்' செய்கிறார்கள்' என 2வது வார்டு கவுன்சிலர் அமுதா (தி.மு.க.,) குற்றம்சாட்ட 'நாங்கள் அப்படி செய்யவில்லை' என மண்டலம் 2 உதவி கமிஷனர் அமிர்தலிங்கம் கூற வாக்குவாதம் ஏற்பட்டது.
பெருங்காமநல்லூர் கைரேகை சட்ட போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆரப்பாளையத்தில் நினைவு தூண் வைக்க 2008-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மாநகராட்சி ஒப்பந்தங்களை ஒரே நிறுவனத்திற்கு கொடுத்து வருவதாகவும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் போது கூட ஒரே நிறுவனம் வருவதும் அதிசயமாக உள்ளது என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
திருப்பாலை, நாகனாகுளம், அய்யர்பங்களா, கண்ணனேந்தல் உள்ளிட்ட பல வார்டுகளில் நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகரித்து வருவதாக 6வது வார்டு கவுன்சிலர் பால்செல்வி (தி.மு.க.,) தொடர்ந்து புகார்களை அடுக்கினார்.
மா.கம்யூ., கவுன்சிலர் (வார்டு 23) குமாரவேல் பேசுகையில், ''மாநகராட்சி அலுவலகத்தில் கட்சி வாரியாக அலுவலகம் கொடுப்பது, மண்டல தலைவர்களுக்கு பின்பு கட்சி சார்பில் கவுன்சிலர்கள் பேசுவது உள்ளிட்ட மரபுகளை பின்பற்ற வேண்டும்'' என்றார்.
பா.ஜ., கவுன்சிலர் பூமா தன் 86வது வார்டு கீரைத்துறையை கமிஷனர், மேயர், அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறி கிழிந்த, ஒட்டுப்போட்ட ஆண் சட்டை அணிந்து ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தார். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. ஒட்டுப்போட்ட சட்டை போல் தான் மாநகராட்சி வேலைகளும் 'ஒட்டு' போட்டு நடக்கிறது என தெரிவித்தார்.