தர்மபுரி திமுகவில் அழுக்கு துணிகள்:- சீக்கிரம் சலவை செய்யப்படுமா?

ம.பா.கெஜராஜ்,
தன்னை திமுக பொறுப்பாளர்கள் திட்டமிடு ஒரங்கட்டப்படுவதாக அக்கட்சியில் இணைந்த பழனியப்பன் அப்செட்டில் இருக்கிறாராம்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறவில்லை.
ஐந்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றது.
ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தருமபுரியில் திமுகவை வலுப்படுத்த நினைத்த அக்கட்சித் தலைமை மாற்றுக் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளை வளைத்து வருகிறது.
அதற்காக திமுக போட்ட தூண்டிலில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அமமுகவில் துணைப் பொதுச்செயலாளருமான பி.பழனியப்பன் சிக்கினார்.
இவர் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியுடன் கடந்தாண்டு ஜூலை மாதம் தன்னை திமுகவில் சேர்ந்தார். பழனியப்பன் தருமபுரியில் மிகவும் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதி என்பதால் திமுக வில் பெரிய பொறுப்பு ஏதும் அவருக்கு அளிக்கப்படும் என்று அவரும், அவரது அடிவருடிகளும் ஆசைப்பட்டனர்.
ஆனால், ஓராண்டு கடந்த பின்னரும் பழனியப்பனுக்கு எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை, இருந்தாலும் அவர், கட்சி கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் தொய்வில்லாமல் தலைக்காட்டி வருகிறார். ஆனாலும், அவரை தற்போதைய மாவட்ட செயலாளர்களான தடங்கம் சுப்பிரமணி மற்றும் பி.என்.பி.இன்பசேகரன் ஆகியோர் திட்டமிட்டு ஒதுக்கி வருவதாக திமுகவில் உள்ள சிலரே குற்றம்சாட்டி வருகின்றனர்.
அப்படியிருக்க மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பழனிப்பனை நெருங்கவிடாமல் பார்த்து வருகின்றனர். கூடுமானவரை பழனியப்பனை எந்த ஒரு கட்சி நிகழ்சிக்கும் அழைக்காமல் ஓரங்கட்டி வருகின்றனர்.
இதெல்லாம் தலைமைக்கு தெரியாமல் இல்லை. ஆகவே தருமபுரியில் திமுகவின் வளர்ச்சி பெரிய அளவில் இல்லாததால் தற்போதைய மாவட்ட செயலாளர்களான தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் ஆகியோரை மாற்றிவிட்டு புதிய நபர்களுக்கு வாய்ப்பளிக்க தலைமை திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
தருமபுரியிலுள்ள இரு மாவட்ட பொறுப்பாளர்களும் கட்சி தொண்டர்களை அரவனைத்து செல்லாமல் அவர்களுக்கு தேவையானவர்களை மட்டும் அருகில் வைத்துக்கொண்டு கட்சி பணிகளை செய்து வருவதால், திமுக கட்சி தொண்டர்கள் அவர்கள் இருவர் மீதும் அதிருப்பதியில் உள்ளனர்.
மேலும் கட்சியினரை அவர்கள் மதிப்பதில்லை. பழனியப்பன் பவருக்கு வந்தால் கட்சியினரை மதிப்பார் என தொண்டர்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்று திமுகவினர் கூறி திரிகிறார்கள்.
ஆக தர்மபுரி மாவட்ட திமுகவில் உள்ள அழுக்கு மூட்டைகளை சலவை செய்தால் நலம்.