முதலமைச்சரின் மகன் என்னை கொல்ல போகிறார்! எம்.பி.பகீர் புகார்!

ஜார்ஜ்.ரவி,
தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் எப்போது என்ன நடக்கும் என்கிற பீதி மக்களிடையே நிலவுகிறது. கூடவே முதலமைச்சரின் மகன் என்னை கொல்ல போகிறார் என்று எம்.பி. ஒருவர் பகீர் புகார் அளித்து பீதியை கூட்டியிருக்கிறார்.
தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக மாறி உள்ளது என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார், அதோடில்லாமல் அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா வந்து இருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தான் மகாராஷ்டிராவின் முதல் எதிரி என உத்தவ் தாக்கரேயின் கட்சி நாளேடான 'சாம்னா' பத்திரிகையில் விமர்சித்து எழுதப்பட்டு உள்ளது.
சாம்னா பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பதாவது:-
சிவசேனாவின் பெயர், சின்னத்தை வாங்கிய பிறகு, தாமரையின் கால்கள் உடையும் வரை பா.ஜனதா ஆட்டம் போட்டது. ஏக்நாத் ஷிண்டே அணியை விட பா.ஜனதா தான் மகிழ்ச்சி அடைந்தது. டெல்லியின் கால் அடியில் விழுந்து கிடக்கும் மனநிலையில், தாக்கரேயால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட சிவசேனாவை தேர்தல் ஆணையம் ஒப்படைத்து உள்ளது.
சத்ரபதி சிவாஜி ஜெயந்தி அன்று ஷிண்டேக்கு சிவசேனா சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்தார். அமித்ஷாவின் கருணை இருந்ததால் ஷிண்டேக்கு சின்னம் கிடைத்தது. அதை தற்போது அவர் மறைக்கிறாரா?. இந்த மனிதர் (அமித்ஷா) மகாராஷ்டிரா மக்களுக்கு முதல் எதிரி. தங்கள் சொந்த ஆசைகளை அமித்ஷாவுக்கு பின்னால் நின்று மறைப்பவர்களும் மகாராஷ்டிராவின் எதிரிகள் தான்.
சிவசேனா இப்பொழுதும், எப்போழுதும் தாக்கரேக்கு சொந்தமானது தான். மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்கவும். வில், அம்பு சின்னத்தை வாங்கவும் ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் என்னை கொலை செய்ய முதலமைச்சர் ஷிண்டே மகன் சதி செய்கிறார் என்று சஞ்சய் ராவத் எம்.பி.வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி பெயர் மற்றும் சின்னத்தை பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக உத்தவ் தாக்கரே அணியை எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்த நிலையில்,
இதுதொடர்பாக சஞ்சய் ராவத், மும்பை போலீஸ் கமிஷனருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் எனது பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குண்டர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து இருந்தேன்.
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. என்னை கொலை செய்ய தானே ரவுடி ராஜா தாக்குரை ஏவி உள்ளதாக எனக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை நான் உறுதி செய்து உள்ளேன். என் மீது தாக்குதல் நடத்த ரவுடி ராஜா தாக்குர் தயராகி வருகிறார். பொறுப்பு உள்ள குடிமகனாக இந்த தகவலை நான் உங்களுக்கு கூறுகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.