ஆளொக்கொரு செங்கல் எடுத்த அண்ணாமலை-உதயநிதி!

ஜெ.அருண்ஹென்றிக்ஸ்,
பா.ஜ,க.தலைவர் அண்ணாமலையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஆளொக்கொரு செங்கல் எடுத்துக்கொண்டு ஈரோடு இடைத்தேர்தலை கலக்கி வருகிறார்கள்.
ஈரோடு தேர்தல் பரப்புரை அனல் பறந்துக் கொண்டிருக்கிறது. நேற்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார்.
அந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.300 கோடி செலவு செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள். ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இது தான் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் பொட்டல் காடாக காட்சி அளிக்கும் அந்த இடத்தின் படத்தை காட்டினார்.
மேலும் அங்கு இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் நான் எடுத்து வந்து விட்டேன் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் செங்கலை காட்டினார்.
இது தான் பா.ஜனதாவும் அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார்.
அதற்கு பதிலடியாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது பிரசாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டினார். அப்போது 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தர்மபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கூறினீர்களே 14 ஆண்டுகளாகியும் அங்கு ஒரு செங்கலை கூட காணவில்லை. எனவே இந்த ஒரு செங்கலை உதயநிதி ஸ்டாலினுக்கு பார்சல் அனுப்பி வைப்பேன் என்றார்.
இப்படி இருவரும் மாறி, மாறி செங்கலை காட்டிபிரசாரம் செய்த காட்சிகள் பரபரப்பாக பேசப்படுகிறது.