மாட்டு இறைச்சி கிடைப்பதில் சிக்கல்; வியாபாரிகள் சங்க ஆர்பாட்டத்தில் செ.கு.தமிழரசன்!

ஜி.சாந்தகுமார்,
மாட்டிறைச்சி கிடைப்பதில் சிக்கல் உள்ளதாகவும், அதற்கு பாஜகவே காரணம் என்ற குற்றச்சாட்டுடன் செ.கு.தமிழரசன் கூறியிருக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற கூட்டணி கட்சி தலைவர்களில் முக்கியமானவராக இருந்தவர் செ.கு.தமிழரசன்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில், கீழ் வைத்தியனான்குப்பம் (கேவி குப்பம்) தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செ.கு.தமிழரசனுக்கு தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் பதவியை வழங்கி ஜெயலலிதா அழகு பார்த்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் ஒதுங்கி இருந்த செ.கு.தமிழரசன் திடீரென கமலுடன் கூட்டணி வைத்து எம்.பி தேர்தலை சந்தித்து, பின்னர் அங்கிருந்து பின்வாங்கினார்.
இதன் பிறகு, நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது, தலித் மக்களுக்கு துணை தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து உள்ளதால் 18 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.
ஆனால் இவரது கோரிக்கையை திமுக, அதிமுக கட்சிகள் கண்டுகொள்ளாததால் உள்ளாட்சி தேர்தலில் யாருக்குமே ஆதரவு இல்லை. வாய்ப்பு இருக்கும் இடங்களில் தலித் மக்கள் வெற்றி பெறுவார்கள் என அறிக்கை விட்டார்.
அப்படிப்பட்ட சூழலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு செ.கு.தமிழரசன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்/
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கம் சார்பில் 8 அம்சக் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இந்திய குடியரசு கட்சித்தலைவருமான செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பசுவதை தடுப்புச் சட்டம் என்பது தமிழகத்தில் இல்லை. ஆனால் இந்த சட்டம் நடைமுறையில் இருப்பதை போன்று அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். இதன் பின்னணியில் மத அரசியல் மட்டும் இல்லாமல் கார்ப்ரேட் அரசியலும் உள்ளது.
இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
யார் பசுவதை தடுப்புச்சட்டம் வேண்டும் என்று சொல்கிறார்களோ? அவர்கள்தான் மாட்டிறைச்சி வர்த்தகத்தை செய்கிறார்கள். இது ஒரு வகையான மறைமுக கார்ப்பரேட் அரசியல் தான்.
இதன் பின்னணியில் பாஜக உள்ளது. அதனால் தான் 70 ஆண்டுகளுக்கு முன்பே அம்பேத்கர் 'உங்கள் வணக்கத்துக்குரிய மாடுகளை இறந்த பிறகு மட்டும் ஏன் அறுப்பதற்காக கொடுக்கிறீர்கள்?
இது தான் நீங்கள் கோமாதாவுக்கு செலுத்துகிற மரியாதையா? உண்மையான வழிபாடா?' என, கேட்டார். அதை தான் நானும், இப்போது கேட்கிறேன். பலரும் மாட்டிறைச்சிக்காக கொலை செய்யப்படுகிறார்க்ள்.
மனிதனின் உயிரை விடவும் மாட்டிறைச்சி முக்கியமானதா? என்று பேட்டியில் சொன்னார்.