மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பா.ம.க- பாஜக ஆதரவு!

ம.பா.கெஜராஜ்,

 இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். இதனிடைய, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில், 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில், காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 மீதமுள்ள 3 இடங்களில் திமுக வேட்பாளர்களான சு.கல்யாணசுந்திரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது.

  கோரிக்கை குறித்து கடிதம் தந்ததற்கு ஆதரவு உண்டு என அண்ணாமலை தெரிவித்ததாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

  இதனிடையே அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இன்று கூட்டம் நடந்தது.

 இது புறம் இருக்க,மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பா.ம.க ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யாவுடன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் குழு இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினர்.

 தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைக் கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எழுதிய கடிதத்தை மருத்துவர் அய்யா அவர்களிடம் ஒப்படைத்தனர்.  

  மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுக குழுவினரும் கேட்டுக் கொண்டனர். அதிமுகவின் கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா, நடத்திய கலந்தாய்வில், அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி வரும் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்பதை மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

ஆக மேற்படி தேர்தலில் அ.தி.மு.க.வும் முட்டி மோதுகிறது.