எங்கே என் ஸ்னோலின்? பின் மண்டையை துளைத்து வாய் வழியாக வெளியேறிய குண்டு - நீதி கிட்டுமா??!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டின் மே 22 தினம் இப்படியாக கனத்த இதயத்துடன் முடிவுக்கு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்ததற்கு அப்போதைய அரசு 13 பேரை குருவிகளை போல சுட்டுக்கொன்றது.
அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிச்சாமி, நான் தொலைக்காட்சியை பார்த்து தான் இந்த சம்பவத்தை தெரிந்து கொண்டேன் என்றார் கூலாக, அவர் தான் போலிஸ் துறைக்கும் மந்திரி என்பது வெட்ககேடான விஷயமாகும்.
மேற்படி சம்பவம், தமிழகம், இந்தியா மட்டுமல்ல, சர்வதேச அளவிலான தலைப்பு செய்திகள் தூத்துக்குடி பக்கம் திரும்பின. இந்த துப்பாக்கிச்சூடு நடந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
சுடப்பட்டவர்களில் யாரும் சமூக விரோதிகள் அல்ல. தங்கள் உரிமைக்காக, வருங்கால சந்ததிக்காக போராட துணிந்த சாமானியர்கள். அதிலும் 10ஆம் வகுப்பு மாணவி ஸ்னோலின் பின் மண்டையை துளைத்து வாய் வழியாக வெளியேறிய குண்டு சக போராட்டக்காரர்கள் மட்டுமின்றி போராட்டம் குணம் படைத்த ஒவ்வொரு தமிழரையும் உருக்குலைய வைத்தது.
பலியான 13 பேருக்கும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரியாதையும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டாலும் தூத்துக்குடி மக்களின் மனதில் இருக்கும் பாரம் மட்டும் குறையவில்லை.
அதற்கு காரணம் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை. அதை ஏன் இன்னும் உறுதி செய்யாமல் இருக்கிறார்கள் என்பது தான் பிரதான கேள்வியாக பலரிடம் இருந்து எழுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட்டது. இதன் அறிக்கை முதலமைச்சர் தலைமையிலான அரசிடம் சமர்பிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நடந்த துயரத்திற்கு திமுக ஆட்சியில் தீர்வு கிடைக்கப் போகிறது என்று மக்கள் பெரிதும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
துப்பாக்கிச்சூட்டிற்கு 17 போலீசார் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. மறுபக்கம் சிபிஐ வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விட்டனர். அப்புறம் ஏன் தண்டனை கொடுப்பதில் இவ்வளவு தாமதம்? மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவோம் என்ற வாக்குறுதி என்னவாயிற்று என்பது அம்மாவட்ட மக்களின் விடைதெரியா வினா?