இந்த மண்ணை ''திராவிட இயக்கம் தான் ஆளும்:- செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு!கருத்து கூறிய சபாநாயகர்!

டி.முகமது இர்பான்,
இந்த மண்ணை ''திராவிட இயக்கம் தான் ஆளும்; வேறு எவராலும் இந்த மண்ணை ஆள முடியாது,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்கோட்டையன் சட்டமன்றத்தில் சொன்னார்.
சட்டசபையில் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசினா. அப்போது அவர் பேசியதாவது, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான், அ.தி.மு.க.,வின் கொள்கை. எனினும், அ.தி.மு.க., ஆட்சியில், நீட் தேர்வை எதிர்கொள்ள, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, 412 மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாணவர்களுக்கு பேராசிரியர்கள் வழியாக பயிற்சி அளிக்கப்பட்டதால், அவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ளும் திறமை ஏற்பட்டது.
மேலும், 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக, இந்திய வரலாற்றில் மருத்துவ படிப்பில், ஏழை மாணவர்களுக்கு இடம் கிடைக்க வழி செய்யப்பட்டது. தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்த சட்டம் கொண்டு வந்தோம். அதை நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்க, கடுமையான சட்டங் களை இயற்ற வேண்டும்.
தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிட்டு,அதிலிருந்து 600 கோடி ரூபாயை எடுத்து, உயர் கல்வி படிக்கும், தமிழ் வழிக் கல்வி மாணவியருக்கு உதவி செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு, 760.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இன்று தமிழ் வழிக் கல்வியில், அரசு பள்ளிகளில் படித்த மாணவியர், 1.98 லட்சம் பேர் மட்டுமே உயர் கல்வி படிக்கின்றனர். அவர்களுக்கு உதவித்தொகை வழங்க, 250 கோடி ரூபாய் போதுமானது. எனவே, தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை, நீட் தேர்வாக இருந்தாலும், 'கியூட்' தேர்வாக இருந்தாலும், அதை எதிர்க்கும் திட்டத்தில், அ.தி.மு.க., உறுதியாக நிற்கும். திராவிட இயக்கம் தான் இந்த மண்ணை ஆளும்; வேறு எவராலும் இந்த மண்ணை ஆள முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ''ஒரு கொள்கையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் சரியாக நிற்கிறீர்கள்,'' என்றார்.