பா.ரஞ்சித்தும் பாராளுமன்றமும்! ஜனாதிபதிக்கே தீண்டாமையா? நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பா.ரஞ்சித்தும் பாராளுமன்றமும்! ஜனாதிபதிக்கே தீண்டாமையா? நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ம.பா.கெஜராஜ், 

  தலைநகர் டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

திறப்பும் -புறக்கணிப்பும்

  மேற்படி பாராளுமன்றத்தை   பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார். பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. அதை எதிர்கட்சிகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

  இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கின்றன.

 பொது நல வழக்கு

இவை ஒருபக்கம் இருக்க பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கன்னியாகுமரியைச் சேர்ந்த வக்கீல் ஜெய் சுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.

   அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- அரசியலமைப்பு சட்டம் 79-வது பிரிவில் பாராளுமன்றம் என்பது ஜனாதிபதியையும் இரு அவைகளையும் கொண்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர்.

   பிரதமரையும், மந்திரிகளையும் நியமிப்பதுடன், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பெயரிலேயே எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற சூழலில் புதிய பாராளுமன்றத்தை திறப்பதற்கு அவருக்கு அழைப்பு விடுக்காதது, ஜனாதிபதியின் மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது.

 இந்த விவகாரத்தில் மக்களவை செயலாளரின் அழைப்பிதழ் தன்னிச்சையானது. எனவே புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

தற்போது இந்த மனுவானதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது

 மேற்படி மனு நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று 26.05.2023 விசாரணைக்கு வருகிறது.

 பா.ரஞ்சித் ட்விட் (நவீன தீண்டாமையா)

 புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்காத  விவகாரத்தையும், விழுப்புரத்தில் தலித் மக்களை கோயிலுக்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையும் ஒப்பிட்டு திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

   இந்த விவகாரம் குறித்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:ஜாதியால் வழிநடத்தப்படும் இந்த இந்திய சமூகத்தில் நாட்டின் முதல் குடிமகளும், பொதுமக்களும் எதிர்கொள்ளும் அவலம் ஒரே மாதிரியானது தான். எல்லா அரசியல் கட்சிகளுமே இந்து சித்தாந்தத்தை சடங்கு, சம்பிரதாயங்கள் மூலமாக தூக்கிப்பிடித்து வருகின்றன.

   பல அரசியல் கட்சிகளும், அரசுகளும் வந்து போயிருக்கின்றன. அவை அனைத்துமே சித்தாந்த பேதமில்லாமல் சடங்கின் புனிதத்தை பாதுகாக்கவே பாடுபடுகிறார்கள். இவ்வாறு அதை பாதுகாப்பதன் மூலம் நவீன தீண்டாமை, ஜாதி பாகுபாட்டையும் அவர்கள் வளர்க்கிறார்கள்.

   அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் செயல்பட்டு வரும் பா.ஜ.க. வுக்கு கடும் கண்டனங்கள் என்று பா.ரஞ்சித் அந்த பதிவில் கூறியுள்ளார்.

 பாராளுமன்றம் ஜனநாயகத்தின் திருக்கோவில்.

  இது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- மோடி அவர்களே, பாராளுமன்றம் ஜனநாயகத்தின் திருக்கோவில். இது மக்களால் உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகம், பாராளுமன்றத்தின் முதல் அங்கம் ஆகும். உங்கள் அரசின் அகந்தை, பாராளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது.

 கருத்து ஃபிரம் காங்கிரஸ்

 காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- ராஞ்சியில் நேற்று நாட்டின் மிகப்பெரிய நீதித்துறை வளாகத்தை ஜார்கண்ட் ஐகோர்ட்டு வளாகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்துள்ளார்.

   ஆனால் ஒற்றை மனிதரின் எல்லாமே நானே என்ற அகந்தையும், ஆசையும்தான் டெல்லியில் 28-ந் தேதி பாராளுமன்றக் கட்டிடத்தை நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி திறந்து வைக்கும் அரசியல் சாசன சிறப்புரிமையை மறுக்கிறது என்று கூறியுள்ளார்.

 

 75 நாணயம் புழக்கம்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது.

   இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலதுபுறமாக இடம்பெறுகிறது. இத்துடன் இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் இடம்பெறுகிறது.

   நாணயத்தின் மற்றொரு புறத்தில் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது. சன்சத் சங்குல் என்ற வார்த்தை தேவனகிரியிலும், பாராளுமன்ற வளாகம் என்ற வார்த்தையும் நாணயத்தில் பொறிக்கப்படுகிறது. இந்த நாணயம் வட்ட வடிவத்தில், 44 மில்லிமீட்டர் சுற்றளவு, நாணயத்தை சுற்றி 200 பற்கள் அடங்கிய டிசைன் வழங்கப்படுகிறது.

 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய நாணயம் அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜின்க் இடம்பெற்று இருக்கும்.