அ.தி.மு.க.வில் தன்னை சேர்த்துக் கொள்ள ஓ.பன்னீர் செல்வம் தூதுவிட்டார்! எடப்பாடி பேச்சு!! பாஜக பின்னணியா?

அ.தி.மு.க.வில் தன்னை சேர்த்துக் கொள்ள ஓ.பன்னீர் செல்வம் தூதுவிட்டார்! எடப்பாடி பேச்சு!! பாஜக பின்னணியா?

ம.பா.கெஜராஜ்,

 அ.தி.மு.க.வில் தன்னை சேர்த்துக் கொள்ளக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தூதுவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னாராம், இப்படித்தான் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு பின்னணியில் பா.ஜ.க.வும் இருப்பதாக கூறப்படுகிறது.

 சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சில விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார்.

 இது பற்றின விவரம் வருமாறு, ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிடும் போது அவருக்கு எதிராக போட்டியிட்ட நபருக்கு உதவியாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் 3 முறை முதல்-அமைச்சர் என்று கூறிக்கொள்கிறார். கலெக்டர் விடுமுறையில் சென்று விட்டால் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு எப்படியோ? அதுபோல் அவர் பொறுப்பாக இருந்தார்.   என்னிடம் கட்சிக்கு வந்துவிடுகிறேன் என்று தூது விட்டார். அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை. கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு மற்ற தொகுதிகளுக்கு சென்று கட்சிப்பணிகளை அவர் ஆற்றவில்லை. அவரது மகனை பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற செய்தார்.

 அவர் எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க. பகடைக்காயாக வைத்து கொண்டுள்ளது.

 இதனை கட்சி நிர்வாகிகள் உணர வேண்டும் என்று அவர் பேசினார்.

 ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை ஒன்று மீண்டும் அ.தி.மு.க.வில் சேருவது அல்லது வேறு கட்சியில் இணைவது, இல்லாவிட்டால் தனிக்கட்சி தொடங்குவது ஆகிய 3 வழிகள் தான் உள்ளன. இதில் தனிக்கட்சி தொடங்குவதும், வேறு கட்சிகளில் இணைவதும் முடியாது ராசா என்று ஆதரவாளர்கள் ஒருபக்கம் சொல்லிக்கொண்டிருக்க அவருக்கே அது புரிகிறது.

  இந்நிலையில் தான் அ.தி.மு.க.வுக்குள் திரும்பி செல்லும் முயற்சியை அவர் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அ.தி.மு.க.வுக்குள் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மேல்மட்ட தலைவர்களை பொறுத்தவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வது சரியாக இருக்காது என்று கருத்து சொல்கிறார்களாம்.

 ஏன்னா? சட்ட போராட்டம் பல நடத்தியே கட்சியை ஒன்றுபடுத்தி இருக்கிறோம். மீண்டும் கட்சிக்குள் வந்தால் தனது தலைமையில் தனித்தே செயல்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல அவரது ஆதரவு வட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு பதவிகள் பெற்றுத்தர முயற்சிப்பார். அது கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்.

  சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சந்திக்கவும் தயங்காதவர். வருங்காலத்தில் அவரது கையை பலப்படுத்த தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினால் சமாளிக்க வேண்டியது வரும். முக்கியமான முடிவுகளை தலைமை எடுக்கும் போது அவரும் அதை ஒருமனதாக ஆதரிப்பாரா? இப்படி பல்வேறு காரணங்களை எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்களாம்.

 ஆனால் தொண்டர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளனவாம்,

 அதாவது தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட அதிகார போட்டியால் தான் பிரச்சினை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும் கட்சி விசுவாசிதான். அவருக்கென்றும் குறிப்பிட்ட ஆதரவை வைத்துள்ளார். கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு கூடுதல் பலம் தான் தேவை. பொதுச்செயலாளர் ஆகிவிட்டதால் எடப்பாடி பழனிசாமியும் முன்பு போல் இருக்கமாட்டார். ஓ.பி.எஸ். பிரச்சினை செய்தால் அதை அவரால் சமாளிக்க இயலும்.

 ஆக ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்ப்பதும் பலமாகத்தான் இருக்கும். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏதாவது ஒரு பதவியை கொடுத்து அமர வைக்கலாம்.

 ஏன்னா அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜகவும், ஓ.பன்னீர்செல்வம் இணைவதை விரும்புகிறது. அதனால் தான் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களை தவிர்க்க முடியாது என்று அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார்.

 அப்படியிருக்க ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளின் அடிப்படையில் அதிமுகவில் இணைத்துக் கொள்வதாக விரைவில் அறிவிப்பு வரலாம்.